Monday, August 10, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | கோசலையின் மனநிலை | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Kosala's mixed thoughts

கம்ப ராமாயண தமிழ்ச்சாரல்

 

அயோத்யா காண்டம் - மந்திரை சூழ்ச்சிப் படலம்

 

இராமனுக்கு முடிசூட்டு விழா என்பதை அறிந்த கோசலையின் மனநிலை

 

தசரதன் இராமனின் முடிசூட்டு நாள் குறிக்கக் கோள்கள் அறிந்த சோதிடரை கூட்டி சென்றான்.

 

இச்செய்தி சூறைக்காற்று போல நகர் முழுவதும் பரவியது. இராமன்பால் அன்பு கொண்ட நங்கையர் நால்வர் கோசலையிடம் சென்றனர். அவர்களது மட்டற்ற மகிழ்ச்சியை கண்டு ஆனந்தமடைந்த கோசலை காரணம் வினாவினாள்.

 

அவர்கள், “மன்னன், உன் மகனுக்கு மணிமுடி சூட்டுகிறான்என்று மனம் மகிழ்ந்து உரைத்தனர்.

 

அந்த நங்கையர் கூறிய நற்செய்தி, கோசலைக்கு தென்றலின் சுகத்தை தேடித் தந்தன, அதே சமயத்தில் வாடையின் சூடும் அவளைச் சுட்டது.

 

 

பாடல்

 

'சிறக்கும், செல்வம் மகற்கு' என, சிந்தையில்

பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற,

வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால்

துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே.

 

 

பொருள்

 

சிறக்கும் = சிறப்பினை தரும்;

 

செல்வம் = நாடு என்று கொள்ளலாம்;

 

மகற்கு = மகன் இராமனுக்கு;

 

என = என்று;

 

சிந்தையில் = சிந்தனையில், மனதில், கற்பனையில்;

 

பிறக்கும் பேர் உவகைக் கடல் = தோன்றிய பெரிய மகிழ்ச்சிக் கடல்;

 

பெட்பு அற = பெருமை இன்றி போக;

 

வறக்கும் = வரள வைக்கும் (காய்ந்து போக வைக்கும்);

 

மா = பெரிய;

 

வடவைக் கனல் = கடலை வற்ற வைக்கும் தீ;

 

ஆனதால் = ஆனதால்

 

துறக்கும் = துறக்கும், இழக்கும்;

 

மன்னவன் = தசரதன்;

 

என்னும் துணுக்கமே = என்ற அச்சமானது.

 

நயம்

 

வடவைக் கனல் அவளைத் தீண்டியது, தசரதன் ஆட்சியை விட்டு நீங்குகிறான் என்பதால்.

 

கடல் நடுவே வடவாக்கினி (வடல் + அக்கினி) ஒன்று உள்ளதாக நமது புராணங்களில் நம்பப்படுகிறது.  கடல் நீரின் அளவு அதிகமாகும் போது, வடவை கனல் அதிகப்படியான நீரை வற்றச் செய்துவிடும் (ஊழி காலத்தில் வடவை கனல் மிகப் பெரிதாக உருவெடுத்து அத்தனை கடலையும் வற்ற வைத்துவிடும் என்பது நம்பிக்கை)

 

இராமனுக்கு முடி சூட்டுவது என்றால் அந்த முடி தசரதன் தலையில் இருந்து இறங்க வேண்டும். தசரதன் முடி துறந்தால் தான் இராமன் முடி சூட முடியும்.

 

இராமனுக்கு முடி என்று கேட்ட கோசலை இன்பம், மகிழ்ச்சி கடல் மாதிரி இருந்ததாம்

 

உடனே நினைத்துப் பார்க்கிறாள் ... இராமன் முடி சூட வேண்டுமானால் தசரதன் முடி துறக்க வேண்டுமே, என்று நினைக்கிறாள்.

 

அப்படி நினைத்தவுடன் அவளின் சந்தோஷக் கடல் வடவைக் கனல் எழுந்து கடலை வற்ற வைப்பது மாதிரி வற்றிப் போய் விட்டது

 

இராமன் முடி சூட்டுவதில் கோசலைக்கு இன்பம் தான் என்றாலும், அதில் அவள் பட்ட சின்ன துன்பத்தை , இவ்வளவு நுணுக்கமாக கையாளுவது கம்பனுக்கே சாத்தியம். பின் வரப்போகும் பல மாற்றங்களை குறிப்பால் உணர்த்துகிறாரோ?

 

'சிறக்கும், செல்வம் மகற்கு' என, சிந்தையில்

பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற,

வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால்

துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே.

 

தொடரும்...

 

அன்புடன்

நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தயரதன் இராமனைத் தழுவுதல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Dasaratha hugging Rama

 

கம்பராமயண தமிழ்ச்சாரல்

 

அயோத்யா காண்டம் - மந்திரப்படலம்

 

தயரதன் இராமனைத் தழுவுதல்

 

தசரதன், இராமனுக்கு அரசாட்சி என்ற பொறுப்பை,  அரச பதவியை தருவதற்கு முடிவு செய்து விட்டான்.  இராமனை அழைத்து வரச் சொன்னான். இராமனும் வந்தான்.

 

பாடல்

 

நலம் கொள் மைந்தனைத் தழுவினன்' என்பது என்? நளிநீர்

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்,

விலங்கல் அன்ன திண் தோளையும், மெய்த் திரு இருக்கும்

அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான்

 

பொருள்

 

நலம் கொள் = நன்மைகள் நிறைந்த

 

மைந்தனைத் = மகனை (இராமனை)

 

தழுவினன்' என்பது என்? = தழுவினான், எதற்காக

 

நளிநீர் = கடல் சூழ்ந்த

 

நிலங்கள் = இந்த உலகத்தை

 

தாங்குறு நிலையினை = தாங்கக் கூடிய நிலையை

 

நிலையிட நினைந்தான் = அளவிட நினைத்தான்

 

விலங்கல் அன்ன திண் தோளையும் = மலை போன்ற தன்னுடைய தோளையும்

 

மெய்த் திரு இருக்கும் = உண்மையான திரு இருக்கும். அதாவது திருமகள் நிஜமாக இருக்கும்

 

அலங்கல் மார்பையும் = மாலை அணிந்த மார்பையும்

 

தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான். = தனது தோளையும் மார்பையும் கொண்டு அளந்தான்.


ம்

 

இத்தனை வருடம் தசரதன் அரசை ஆண்டான்.  அந்த ஆட்சிப் பொறுப்பு அவன் தோளில் இருந்தது.   இப்போது அனுவம் எதுவும் இல்லாத இராமனிடம் அரசைக் கொடுக்கப் போகிறான். இராமனால் இந்த பொறுப்பை ஏற்று நடத்த முடியுமா ? அவன் தோள்களுக்கு அந்த வலிமை இருக்கிறதா என்று அறிய, அவனை அணைக்கும் போது  இராமனின்  தோளை தன் தோள்களால் அளந்து பார்த்தானாம்.


நலம் கொள் மைந்தனைத் தழுவினன்என்பது என்நளிநீர்

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்,

விலங்கல் அன்ன திண் தோளையும்மெய்த் திரு இருக்கும்

அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான்

 

தொடரும் ....

 

அன்புடன்

நா.பிரசன்ன லக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தசரதனின் ஒற்றை நரைமுடி | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Dasaratha's Grey hair

 

கம்பராமயண தமிழ்ச் சாரல்

 

அயோத்யா காண்டம் - மந்திரப்படலம்

 

ஒரு நாள் தசரதன் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். காதோரம் ஒரே ஒரு நரைமுடி. அந்த நரை முடி அவனிடம் ஏதோ சொல்லுவது போல் இருந்தது. உன்னிப்பாக கேட்டான்.

 

'மன்னனே, நீ இந்த அரசாட்சியை உன் மகனிடம் தந்து விட்டு, கானகம் சென்று தவம் செய்யச் செல் ' என்று சொல்லியது.

 

தசரதனிடம் அந்த நரை முடி சொன்ன பாடல் ...

 

பாடல்

 

மன்னனே! அவனியை

மகனுக்கு ஈந்து, நீ

பன்ன அருந்தவம்

புரி பருவம் ஈதுஎன,

கன்ன மூலத்தினில்

கழற வந்தென,

மின் எனக் கருமை போய்

வெளுத்தது - ஓர் மயிர்.

 

பொருள்

 

மன்னனே! = மன்னவனே

 

அவனியை = இந்த உலகத்தை, இந்த அரசை

 

மகனுக்கு ஈந்து, = உன் மகனிடம் தந்து விட்டு

 

நீ = நீ

 

பன்ன அருந்தவம் = செய்வதற்கு அறிய தவம்

 

புரி = புரிய, செய்ய

 

பருவம் ஈது = சரியான காலம் இது

 

என = என

 

கன்ன மூலத்தினில் = கன்னத்தின் ஓரத்தில்

 

கழற = அதட்டி சொல்ல, கண்டித்து சொல்ல

 

வந்தென = வந்தது போல வந்தது

 

மின் எனக் = மின்னலைப் போல, வெண்மையாக, ஒரு ஒளிக் கற்றை போல

 

கருமை போய் = கருமை நிறம் போய்

 

வெளுத்தது  = வெண்மையாக வந்தது

 

ஓர் மயிர் = ஒரே ஒரு முடி

 

 

தசரதனின் காதோரம் தோன்றிய இந்த ஒற்றை நரைமுடி பின்பு இராவணனின் பத்து தலை அகந்தையை வீழச்செய்தது

 

தொடரும்...

 

அன்புடன்

நா. பிரசன்னலஷ்மி

Tuesday, July 7, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | பரசுராமன் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Parasurama challenging Rama

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

பரசுராமப் படலம்

இராமன் சீதை மணம் முடிந்து இருவரும் ரதத்தில் அயோத்தி நோக்கி செல்கையில், பரசுராமன் இடைமறித்தார்.

பரசுராமன் கோபமாக ”நான் உன் குல க்ஷத்திரிய அரசர்களைக் கொன்று வென்ற உலகம் முழுவதையும் முனிவர்களுக்குக் கொடுத்துவிட்டு, வேறு பகைவர்கள் இல்லையென்று எண்ணி, துறவு பூண்டு ஒரு மலையில் தங்கி தவம் செய்துகொண்டிருந்தேன். நீ வில்லை முறித்த ஓசை என் செவியில் விழுந்தது. அந்த ஆரவாரம் என் தவத்தைக் கலைத்துவிட்டது. 'இன்னும் வீரனான ஒரு ஷத்ரியன் எங்கோ உயிரோடு இருக்கிறான்’ என்று கோபங் கொண்டு இங்கே வந்தேன். நீ ஆற்றல் உள்ளவன் என்றால் உன்னோடு போர் செய்வேன். அதற்கு முன்னால், உன்னால் முடிந்தால் முதலில் இந்த வில்லை வளைத்துப் பார்” என்கிறான்.

பரசுராமன் இராமனை நோக்கி, “இராமா, நீ ஒடித்த வில் ஊனமுற்ற வில். அதை நீ முறித்ததெல்லாம் பெரிய வீரத்தில் சேர்த்தியில்லை. விஷ்ணுதனுசு இதோ இருக்கிறது. இதை உன்னால் வளைக்க முடியுமா?” என்று சவால் விடுகிறான்.

ஒருவர் வெற்றியையும், வெற்றிச் செயலையும் எப்படி ஆணவத்தில் சிலர் இழித்தும் பழித்தும் கூறுவாரோ அப்படியே பேசுகிறான் பரசுராமனும்.

புன்சிரித்த ராமன், பரசுராமனிடம் வில்லைக் கேட்கிறான்.

செருக்கோடும் தவ வேகத்தோடும் கோபவெறியோடும் தோன்றிய பரசுராமன், தன் கையிலிருந்த விஷ்ணு தனுசை இராமன் கையில் கொடுக்கிறான்.

அப்போது இராமன் கோபம் கொள்ளாமல் அதே சிரிப்பு மாறாமல் அவ்வில்லை பெற்று, சுலபமாக நாணேற்றினான்.

வில் வளைத்த இராமன், பரசுராமனைப் பார்த்து, "உலகின் அரசர்களை எல்லாம் கொன்றாய். என்றாலும் வேத விதை முனிவன் மகன் நீ ஆதலால் உன்னைக் கொல்லக் கூடாது. ஆனால் வளைத்த வில்லுக்கு இலக்கு வேண்டுமே, அது யாது? என்று இராமன் கேட்டான்.


பாடல்

எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!' என,
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே

பொருள்

எய்த அம்பு = நீ இப்போது தொடுக்கும் அம்பு;

இடை பழுது எய்திடாமல் = இடையே குறை நேரா வண்ணம்;

என் செய் தவம் யாவையும் = நான் செய்த தவத்தின் பயன் முழுவதையும்;

சிதைக்க என = கொள்வதாக என்று சொல்ல;

கை அவண் நெகிழ்தலும் = (அப்போது) இராமபிரானின் கை நெகிழ்ந்த;

கணையும் சென்று = அம்பும் உடனே சென்று;

அவன் மை அறு தவம் = பரசுராமர் ஈட்டியிருந்த தவத்தின் பயன்கள்;

எலாம் வாரி, மீண்டதே = யாவற்றையும் வாரிக் கவர்ந்து கொண்டு அம்பறாத் தூணியை மீண்டும் வந்தடைந்தது.

நயம்

இராமன் நாணேற்றியே கணமே, பரசுராமன் கர்வம் அழிந்து விட்டது. ஆணவம் அகன்று விட்டது.

"இந்த வில்லில் தொடுத்த அம்பு வீண் போவதன்று. எனவே இதற்கு இலக்கு யாது? விரைவாகச் சொல்” என்ற இராமனின் அந்தக் கேள்விக்கு "தன் தவமே இலக்கு" என்று கூறுகிறான் கர்வம் அழிந்த பரசுராமன்.

நான் செய்த தவத்தின் பயனை உன் அம்புக்கு இலக்காகத் தருகிறேன் என்று பரசுராமன் கூற, இராமன் அம்பு பரசுராமன் தவத்தையெல்லாம் வாரிக்கொண்டு இராமனிடம் திரும்பியது.

இராமனை வெல்ல வந்தவனின் மனதை, அன்பால் இராமன் வென்று விட்டான். இராமனின் அன்பு நெறி பகைவன் மனத்தையும் மாற்றிப் புனிதனாக்கியது.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?" என்பது வள்ளுவர் வாக்கு.

"நீ நினைப்பவை எல்லாம் நிறைவேறட்டும்" என்று இராமனை வாழ்த்தித் தொழுது போகிறான் பரசுராமன்.

இராமனின் ஆணவமற்ற தன்மை, பொறுமை, அன்பு, மரியாதை, தைரியம், வீரம், வேகம், விவேகம் போன்ற பல குணாதிசயங்களை ஒரு பாடலில் அடக்கியாள்வது கவி சக்கரவர்த்தி கம்பருக்கு மட்டுமே சாத்தியம்.

எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!' என,
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | இராமன் சீதை மணம் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Sita Rama Kalyanam

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

கடிமணப்படலம்

ஸ்ரீ இராமன் சீதையின் கையைப் பற்றி தீ வலம் வரும் பாடல்

பாடல்

வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான்

பொருள்

வெய்ய  கனல்  தலை = வெம்மை  மிக்க  தீயின்கண்;
வீரனும்  அந்நாள் = மாவீரனாகிய  இராமபிரான்  அப்பொழுது;
மையறு  மந்திரம்  மும்மை வழங்கா = குற்றமற்ற மந்திரங்களை மும் முறை கூறி; 
நெய் அமை ஆவுதி  யாவையும்  நேர்ந்தே = நெய்யோடு கூடிய
அவியுணவு யாவற்றையும் பெய்தான் (அதன்பின்);
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான் = அழகிய சீதையினுடைய தளிர் போன்ற மெல்லிய கரத்தினைத் தனது அகன்ற திருக்கரத்தாற் பற்றினான்.

நயம்

மும்மை வழங்குதல் என்பது மந்திரத்தை உச்சரித்து நெய்யை மும்முறை மண்ணுதல் என்பர்.

“நெய்யை முனை  முதிர் தருப்பை தன்னால்  மந்திரத்து அமைய முக்கால் மண்ணி” என்று சீவகசிந்தாமணி (2465)  நூலில் உள்ள பாடல் இந்த மரபை பேசுகிறது.

அறம் தளிர்ப்பதற்கு ஆவனவெல்லாம் புரிய உள்ள கை என்றும் பொருள்பட
தோன்ற, “தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்” என்றார் கம்பர்.


வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான்


 தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | இராமனின் அழகு | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Rama's Divine Beauty

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

உலாவியற் படலம்

இராமன் மிதிலை நகரிலே உலா வந்த போது , வீதி வீதியாய் வீடுகளில் உள்ள பெண்களெல்லாம் தலைவாயிலுக்கு ஓடி வந்து இராமனை காணுகிறார்கள். இரானது திவ்விய அழகு எப்படி வசீகரக்கிறது என்று கம்பர் கூறுகிறார்.

பாடல்

தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்

பொருள்

தோள்கண்டார் = இராமனின் தோள்களை கண்டவர்கள்

தோளே கண்டார் = அந்த தோளை மட்டும் தாம் பார்க்க முடியும். அதை விட்டு அவர்கள் கண்களை எடுக்க முடியாது, அவ்வளவு அழகு

தொடுகழல் = கழல் என்ற ஆபரணம் அணிந்த 

கமலம் அன்ன = (கழல் எப்போதும் தொட்டு கொண்டிருக்கும்) தாமரை போன்ற

தாள்கண்டார் = அடிகளை கண்டவர்கள்

தாளே கண்டார் = அந்த திருவடிகளை மட்டுமே கண்டார்

தடக்கை கண்டாரும் = கையை கண்டவரும்

அஃதே = அதே போல் கையை மட்டும் கண்டனர்

வாள்கொண்ட = வாள் போன்ற கூரிய

கண்ணார் = கண்களை உடைய பெண்கள்

யாரே வடிவினை முடியக் கண்டார் = யாருமே அவன் முழு அழகையும் காணவில்லை

ஊழ்கொண்ட = எப்போது தோன்றியது என்று அறியா காலம் தொட்டு உள்ள

சமயத்து அன்னான் = மதங்களில் உள்ள கடவுளின்

உருவுகண் டாரை ஒத்தார் = உருவத்தை கண்டவர்களை போல அந்த பெண்கள் இருந்தார்கள்.

நயம்

இராமனின் மேனி அழகு பற்றிய பாடலாக அமைத்து , அதன் மூலம் இறையாண்மை இயல்பை கம்பர் நயம்பட கூறுகிறார்.

எப்படி கடவுளை முழுமையாக கண்டு கொள்ள முடியாதோ அது போல இராமனின் அழகையும் முழுமையாக கண்டு உணர முடியாதாம்.

செளந்தர்ய ஈடுபாட்டை வைத்துக் கொண்டு, சமயவாதிகள் ஒவ்வொருவரும் இறைவனது திருஉருவில், ஒவ்வொரு அம்சத்தையே காண்கிறார்கள் என்ற அற்புத உண்மையையும் கவிச்சக்கரவர்த்தி எளிதாகவும் சுவையாகவும் விளக்குகிறார்.

தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | சிவதனுசு | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Rama handling Siva Danus

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

கார்முகப் படலம்

ஜானகி தேவி சீதையை மணம் புரிய ஏற்றவன் சிவதனுசு என்னும் பலம் வாய்ந்த வில்லை வளைக்க வல்லவனாக இருக்க  வேண்டும்.

ஆனால், அந்த விவாக நிபந்தனையான வில்லை யாராலும் அசைக்க கூட முடியவில்லை. பல மன்னர்கள் தோற்றனர். சீதையின் திருமணம் பற்றி எல்லோரும் கவலை கொண்டிருக்க, ஜனகனின் தலைமை புரோகிதரான சதானந்த முனிவர்,  "சக்கரவர்த்தி திருமகன்" இவ்வில்லை வளைத்தால் உலகம் மகிழும்" என்று கூற,  விஸ்வாமித்திரர் இராமரைப் பார்த்தார். முகக்குறிப்பை புரிந்து இராமர் , வேள்வியில் ஆகுதியான நெய் எப்படி செழிப்புடன் தீயாக எழுமோ, அப்படி எழுந்தார்.

நல்லோர் புன்னகை பூக்க, விண்ணோர் உவக்க, விண்ணும் மலையும் நாண, இராமன் வில்லை நோக்கி நடந்தான்.

பாடல்

ஆடக மால் வரை அன்னது தன்னை,
'தேட அரு மா மணி, சீதை எனும் பொன்
சூடக வால் வளை, சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது' என்ன, எடுத்தான்.

பொருள்

சீதைக்குச் சூட்ட மாலையை எடுப்பது போல இராமன் வில்லை எடுத்தான்.

ஆடக மால் வரை அன்னதுதன்னை = மிகப்பெரிய பொன் மலையை போன்ற அந்த சிவ வில்லை
தேட அரு மா மணி = சீதை எனும் பொன்
சூடக வால் வளை சூட்டிட = கிடைத்தற்கரிய சிறந்த இரத்திரனமாம் சீதை எனுப்படுபவளுமான பொன்னாலாகிய கை வளையல்களையணிந்த பெண்ணிற்குச் சூட்டும் பொருட்டு
நீட்டும் ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் = மலர்ந்த பூமாலையே என்று எண்ணுமாறு எளிதாகத் தூக்கி எடுத்தான்

சீதைக்குத் தான் அணியப்போகும் மண மாலையை எவ்வளவு எளிதாகவும் அலஷ்யமாகவும் எடுப்பானோ அப்படியே அதை எடுத்தான்.

நயம்

இராமன் மலர்ந்திருக்கும் பூக்கள் கொண்ட மாலையை எடுப்பது போன்று சிவ தனுசை எடுக்கும் போது கூடியிருந்த மக்கள், கண் இமைக்காமல் உற்று கவனித்துக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு வேறு ஒன்றுமே தெரியவில்லை.

பின் வரும் பாடலில் கம்பர், இராமனின் வலிமையையும்,  வேகத்தையும் அருமையாக விளக்குகிறார்.

எல்லாரும் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். இராமன் மண்டியிட்டதையும், வில்லின் நாணைப் பிடித்ததையும் பார்ப்பதற்கு முன்னர், அவன் கையில் எடுப்பதைப் பார்த்தனர். வில் ஒடிந்த ஓசையைக் கேட்டனர். அத்தனை விரைவு.

இராமன் கையில் எடுத்தது தெரியும், அவ்வளவுதான். பின் வில் முறிந்த பேரொலியைத்தான் அடுத்துக் கேட்டார்கள். அந்தச் செயலின் மின்னல் வேகத்தை கம்பர் வேறு எதனுடனும் ஒப்பிட்டுச் சொல்லவில்லை, ஒப்பிட்டால் அசட்டுத்தனமாகப் போய்விடும் என்று நினைத்திருப்பாரோ  என்னவோ ..

நான்கே நான்கு வார்த்தைகள்தான்.

"எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்". அவ்வளவு தான்!

ஆடக மால் வரை அன்னது தன்னை,
'தேட அரு மா மணி, சீதை எனும் பொன்
சூடக வால் வளை, சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது' என்ன, எடுத்தான்.


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Sequence depicting spontaneous meet of Rama & Sita

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

மிதிலை காட்சி படலம்

இராமன் மிதிலை நகர் வீதியில் வருகிறான். மாடத்தில் சீதை தோழிகளோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். கை தவறி பந்து வீதியில் செல்லும் இராமன் மேல் விழுந்து விடுகிறது.

மாடத்தில் இருந்து சீதை எட்டிப் பார்க்கிறாள். பந்து எங்கிருந்து வந்தது என்று இராமன் மேலே பார்க்கிறான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

கம்பன், அந்த ஒரு கணத்தை, தன் வருணனையில் அருமை காட்சியாகச் சொல்கிறார்.

பாடல்

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்.

பொருள்

எண்ண அரு = எண்ணிப்பார்க்க அருமையான, எண்ணில் அடங்காத

நலத்தினாள் = நல்ல குணங்களை உடையவள்

இனையள் = இந்தத் தன்மை உடையவள்

நின்றுழி = நின்ற பொழுது

கண்ணொடு கண் இணை கவ்வி = இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி

ஒன்றை ஒன்று உண்ணவும் = ஒன்றை மற்றொன்று உண்ணவும்

நிலைபெறாது உணர்வும் ஒன்றிட = நிலை பெறாத உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் = இராமனும்  நோக்கினான்
அவளும் நோக்கினாள் = ஜானகி தேவியும் நோக்கினாள்

நயம்

இந்தப் பாடலை பல நூறு முறை, வெவ்வேறு ஊடகங்கள் மூலம் எல்லோரும் கேட்டு இருப்போம். எனினும் இது வெறும் காதல் பாடல் தானே என்று ஒதுக்க முடியாத வகையில், இதில் நயமும் புத்துணர்வும் புகுத்தி ஆள்கிறார் கம்பர்.

ஒரு பெண், முன் பின் தெரியாத ஒருவனை, வீதியில் நடந்து போகும் ஆணை பார்க்கலாமா? , என்ற தேவையற்ற விவாதங்களுக்கு இடம் அளிக்காமல் சீதையின் நற்பண்பை முன்னிருத்தி, 'கணக்கில் அடங்காத நல்ல குணங்கள் உள்ள சீதை' என்று கூறுகிறார் கம்பர்.

பொறுமை, கருணை, அன்பு, பாசம், நேசம், அருள் என்று எத்தனை நல்ல குணங்கள் உண்டோ அதற்கெல்லாம் மேலும்  நல்ல குணங்கள் உள்ளவள் சீதை. 

"எண்ண அரு நலத்தினாள் இனையள்"

சரி , அப்படி என்றால் இராமன் சீதையை பார்த்தாரா?

அண்ணல் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்று சொல்லி இருந்தால் முதலில் இராமன்  பார்த்தான், பின் சீதையும் பார்த்தாள் என்று வரும்.

அவள் நோக்கினாள் . அண்ணலும் நோக்கினான் என்றால் சொல்லி இருந்தால் முதலில் சீதை  பார்த்தாள். பின் இராமன் பார்த்தான் என்று வரும்.

கம்பன் அப்படி சொல்லவில்லை.

அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்கிறான்.

இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கண்கள் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது. அவர்கள் உணர்வுகள் ஒன்று பட்டது.

"அண்ணலும் நோக்கினாள் , அவளும் நோக்கினாள்" என்கிறான் கம்பன்.

அதாவது,  பார்வைகள் சந்தித்தன... கலந்தன... கண்கள் கவ்விக் பிடித்துக் கொண்டன என்கிறார் கம்பர்.

அவர்கள் மனதில் என்ன எண்ணம் ஓடியது? அழகு, காமம், செல்வம் என்பனவா?

இல்லை! அதெல்லாம் சிற்றின்பர்கள் மனப்போக்கு.

பின் அவர்கள் என்னதான் நினைத்தார்கள்?

ஒன்றுமே நினைக்கவில்லை என்கிறான் கம்பன்.

"நிலைபெறாது உணர்வும் ஒன்றிட"

உணர்ச்சிகளின் தன்மை ஒரு நிலையில் நிற்காத குணம் தான். அது அலைந்து கொண்டே இருக்கும்.

ஆனால், அவர்கள் பார்த்த அந்த ஒரு கணத்தில் உணர்ச்சிகள் ஒன்று பட்டுவிட்டன. வேறு எந்த எண்ணமும் இல்லை. ஒன்றி விட்டது.

இத்தனையும் நிகழ்ந்தது ஒரு நொடியில்.  அல்லது அதற்கும் குறைவான நேரத்தில்.

இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு, காதல் கொள்ளுதல் - அந்த தெய்வீகம், கம்பனை தவிர, யாரால் இப்படி வர்ணிக்க முடியும்?

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்.


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | மிதிலை காட்சி | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Mithila Kingdom

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

மிதிலை காட்சி படலம்

விஸ்வாமித்திரன் முன்னே நடக்க, இராமனும் அவன் தம்பி இலக்குவனும் பின்னால் வருகிறார்கள்.

மிதிலை நகர எல்லைக்குள் கால் பதிக்கிறார்கள்.

அந்த ஊர் மதில்கள்மீது கொடிகள் பறக்கின்றன.

பாடல்

'மை அறு மலரின் நீங்கி,
யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்' என்று,
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று
அழைப்பது போன்றது அம்மா!

பொருள்

மை அறு மலரின் நீங்கி = குற்றமற்ற தாமரை மலரை விட்டுப் பிரிந்து;

யான் செய் மாதவத்தின் = நான் புரிந்த மிகப் பெரிய தவத்தால்;

வந்து செய்யவள் இருந்தாள் = திருமகள் என்னிடம் வந்து பிறந்துள்ளாள்;

என்று செழுமணிக் கொடிகள் என்னும் = என்று கூறிப் பெரிய அழகிய கொடிகள்  என்கின்ற;

கைகளை  நீட்டி = (தன்) கைகளை மேலும் கீழுமாக அசைத்துக் காட்டி (அவற்றால்);

அந்த கடிநகர் = காவல் மிக்க அந்த மிதிலா நகரம்;

கமலம் செங்கண் ஐயனை = தாமரை போன்ற கண்களைக் கொண்ட இராமனை;

ஒல்லை வா என்று = விரைவில் வந்து சேர்க என்று;

அழைப்பது போன்றது = அழைப்பதைப் போன்றுள்ளது.

நயம்

அணி: தன்மைத் தற்குறிப்பேற்ற அணி.

உருவகம் : கொடிகளாகிய  கைகள்.

இராமன் ஏன் மிதிலைக்குள் வரவேண்டும்?

காரணம் இருக்கிறது.

‘மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்’ என்று அந்தக் கொடிகள் சொல்வதாகக் கம்பர் வர்ணிக்கிறார்.

குற்றமில்லாத தாமரை மலரை விட்டு நீங்கிய திருமகள், எங்கள் நகரம் செய்த தவத்தினால் இங்கே சீதையாக வந்து பிறந்திருக்கிறாள். ஆகவே, இராமா நீ இங்கே வா, அவளுடைய கைத்தலம் பற்றிக் கொள்!

இராமன் மிதிலை அருகிலே செல்லும் போது, அந்நகரத்து மதில்கள் மேலுள்ள கொடிகள் அசைவது, "திருமகள் தன்னிடத்தில் சீதையாகப் பிறந்துள்ளாள்" என்பதைக் குறிப்பாகச் சொல்லி அவளுக்குக் கணவனாவதற்கு ஏற்ற இராமனை விரைவிலே வந்து மணம் புரியுமாறு கைகாட்டி அழைப்பது போன்றுள்ளதாக கம்பர் கூறுகிறார்.

'மை அறு மலரின் நீங்கி,
யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்' என்று,
செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று
அழைப்பது போன்றது அம்மா!


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | அகலிகை | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Agalya

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

அகலிகைப் படலம்

அகலிகை சாபம் பெற்றதும், இராமனின் பாதத்துளி  பட்டதும் அகலிகை சாப விமோசனம் அடைவதும், விசுவாமித்திரர் இராமனின் வீரத்தையும் கருணையையும் விதந்தோதுவதும் இந்த படலத்தின் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.

பாடல்

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம் 
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்:

பொருள்

கண்ட கல்மிசை = (அவ்வாறு) கண்ட கல்லின்மேலே;
காகுத்தன் கழல் துகள் = இராமனது திருவடித் துகள்;
கதுவ = பட்டதால்;
உண்ட பேதைமை = (தான்) மனத்திற் கொண்டுள்ள அறியாமையாகிய; 
மயக்கு அற = இருள் மயக்கம் நீங்குமாறு;
வேறுபட்டு  = தனது  அஞ்ஞானமாகிய அறியாமை  நிலை மாறி;
உருவம் கொண்டு = உண்மை வடிவம் (புது ஞானஸ்வரூபி) அடைந்து; 
மெய் உணர்பவன் = உண்மையான தத்துவ ஞானம் பெற்றவன்;
கழல் கூடியது ஒப்ப = பரமனது
திருவடிகளை அடைவதைப் போல;
பண்டை வண்ணமாய் = (அந்த
அகலிகை) முன்னைய வடிவத்தோடு;
நி்ன்றனள் = எழுந்து  நின்றனள்;
மா முனி பணிப்பான் = (அதனைக்  கண்ட) விஸ்வாமித்திரன் இராமனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்.

(விஸ்வாமித்திரன் கூறுவது வேறு பாடலில் விளக்கப்பட்டுள்ளது. அதன் பொருட்சுருக்கம் பின்வருமாறு : தேவர் கோமான் இந்திரனுக்கு உடம்பில் ஆயிரம் கண்கள் தோன்றும்படியும், இவள் கல்லாகும்படியும் கௌதம முனிவர் சாபம் தர, கல்லாகி நின்றவள் இவள் என்று விசுவாமித்திரன் கூறினான்)

நயம்

இராமனின் வில்லின் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான்.

(இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு – அதுதான் “தனுஷ்கோடி” – இராம தனுசின் இரு கோடிகள்.)

கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் திருமுகத்தை, கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு, பெற்றனர் பேரின்பம்.

“முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை” என்பது கம்பனின் சொல்லாடல்.

கோதண்டத்தின் கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு! கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இராமனின் பாதங்களின் மகிமையை எல்லோரும் அறிவோம்.

இராமன் பெரியோர்களுக்கு மரியாதை அளிப்பதில் சிறந்தவன். அவனுடைய கால் பட்டு அகலிகை உயிர்த்தெழுந்தாள் என்று  கம்பர் சொல்லவில்லை.

ஏனென்றால் பெற்ற தாய்க்கும் முன்னதாகவே இவள் இராமனை நெஞ்சில் கருக் கொண்டாள். அதனால் கம்பர் இங்கே மூலநூலில் இருந்து சற்றே மாறினார்.

இராமனின் கால் படவில்லை, ஆனால் அவன் நடந்து வந்த போது,  அவன் கால் பட்டு தெறித்த துகள் கல்லென சமைந்திருந்த அகலிகையின் மீது பட்டது என்கிறார். இராமன் காலில் இருந்து கழண்ட துகளினாலேயே அகலிகை சாப விமோசனம் பெற்று தன் பண்டைய வடிவம் பெற்று எழுந்து நின்றாள், என்கிறார் கம்பர்.

தாடகை வதத்தில் வில் எய்த "கை வண்ணம்" ... அகலிகை சாப விமோசனத்தில் துகள் பட்ட “கால் வண்ணம்” என்று பாடும் கம்பனின் சொல்நயம், பின் வேறு படலத்தில் "தோள் வண்ணம்" பற்றியும் பேசும்.

கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்:


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தாடகை வதை | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Vanquishing of Demon Tataka

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

தாடகை வதைப் படலம்

ராமனுடைய வில்லாற்றல் முதன்முறையாக விஸ்வாமித்திரர் மூலமாக வெளிப்படுகிறது.

தன் யாகம் காக்கத் தசரதனிடம் இராமனைத் தரும்படி கேட்கிறார். யாகசாலையைப் பாதுகாக்கும் பொறுப்பை இராமன் ஏற்க வேண்டும் என்கிறார். சிறுவனான இராமனை அவருடன் அனுப்ப முதலில் மன்னன் ன தயங்கினாலும் வசிஷ்டரின் அறிவுரையின்படி அனுப்பி ன வைக்கிறான் தசரதன்.

யாகரட்சணத்திற்கு முன்பாகவே ராமன் தாடகையை எதிர்கொள்ள நேரிடுகிறது. “இந்தத் தாடகை முறைநின்ற உயிரெல்லாம் தன் உணவெனக் கருதும் தன்மையுடையவள்” என்று விஸ்வாமித்திரர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாடகை பயங்கர உருவம் பெற்று வருகிறாள்.

இப்படி வரும் தாடகையை அம்பு எய்து வதைக்க வேண்டும் என்று விஸ்வாமித்திர்ர் எண்ணுகிறார். ராமனுக்கும் முனிவரின் எண்ணம் புரிகிறது. ஆனாலும் ராமன் உடனே அம்பு தொடுக்கவில்லை. ஏன்? “பெண்ணென மனத்திடை பெருந்தகை நினைத்தான்.” ஆனால் முனிவரோ, “ராமா, உயிர்க்குலத்தையே கருவறுத்து வரும் இவளையா நீ பெண்ணென்று நினைக்கிறாய்? இவளுடைய பாவச்சுமையை ஒழிக்க வேறு வழியே இல்லை. “ஆறி நிற்பது அருளன்று.” எனவே அரக்கியைக் கொன்றுவிடு என்று ஆணையிடுகிறார். இதற்குள் தாடகை பாறைக்கற்கலை வீசிவிடுகிறாள். எனவே தற்காப்புக்காக இராமன் அம்பு தொடுக்கிறான்.


பாடல்

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே!


பொருள்

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் = நிறைமொழி  மாந்தரின் சாபச் சொற்களை ஒத்த கடிய வேகமுடைய ஒரு சுடுசரத்தை
கரிய செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் = கரிய நிறமும், அழகும் உடைய, இராமபிரான் இருள் போன்ற நிறத்தை உடைய தாடகையின் மீது செலுத்தி  விடவே;
வயிரக் குன்றக்கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது = அந்த அம்பு வைரம் பாய்ந்த கல் போன்ற அத்தாடகையின்    நெஞ்சில் தங்கியிராமல்;
அப்புறம்  கழன்று = நெஞ்சில் பாய்ந்து பின் முதுகின் புறமாகக் கழன்று;
கல்லாப்புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என = கல்வி அறிவில்லாத கீழோருக்கு நல்லவர்கள் சொன்ன நல்ல பொருளைப் போல;
போயிற்று அன்றே = ஓடிப்போய்விட்டது

நயம்

‘சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்’ என்கிறான் கம்பன்.

வேகத்துக்கு உவமையாக  காற்றின் வேகம் , மனோவேகம் என்பது ஒரு பொதுவான உவமை. மனதில் ஒன்றை நினைத்த தருணத்தில், அங்கே இருப்போம் நாம். நினைவுத்துணுக்கு முடிவதற்கு முன்பே நம்மால் இமயமலைக்கோ, வேறு உலகத்திற்கோ, சந்திரனுக்கோ கூடச் சென்றுவிடமுடியும்.

அதையும் தாண்டிய வேகம் எது? அதுதான் சொல்

வாழ்வில் பல இடங்களில் நாம் பேசியதற்காக மன்னிப்பு கேட்கும் பொழுது, 'யோசிக்காம பேசிட்டேன்' என்போம்.

சொல், சிந்தனை முடிந்து வரும் முன்பே சில வேளைகளில் கிளம்பிச் சென்றுவிடும். ஆகையால் இராமன் அம்பு சொல் மாதிரி கிளம்பிச்சென்றதாம். (இது புலவர் கீரன் காட்டிய நயம்)


‘சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்’ என்கிறான் கம்பன்.

யாருடைய சொல்?
நிறைமொழி  மாந்தரின்
சாபச் சொற்களைப் போல  (விசுவாமித்திர மகரிஷி போன்றவர்களின் சாபச்சொல் எப்படி உடனே தவறாமல் பலிக்குமோ அதுபோல் அவ்வளவு கடும் வேகமாக) இருந்ததாம் அந்த சுடுகின்ற அம்பு (சுடுசரம்)!

இராமனுடைய அம்புக்குக் கடுமை, வேகம், அருமை ஆகிய பண்புகள் உண்டு என்பதை உணர்த்தினார் கம்பர்.

கரிய செம்மல் (இதில் ஒரு நயம் கருமை-செம்மை) என்று கருப்பான இராகவனைக் குறிப்பிட்டவர் தாடகையின் பண்புக்கு இணையாக அல் (இருள்) ஒக்கும் என்று நிற உவமை சொல்கிறார்.

அந்த அம்பு எப்படிச் சென்றது?

‘கல்லாப் புல்லோர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என’ – கல்லாத மூடர்களுக்கு அறிவாற்றல் நிறைந்தவர்கள் எவ்வளவுதான் புத்திமதி சொன்னாலும் அது அவர்கள் மனதில் கொஞ்சம் கூடத் தங்காமல் எப்படி உடனே போய்விடுமோ அதுபோல ராமபாணம் தாடகையின் மார்பை ஊடுருவிச் சென்று விட்டதாம்.

அந்த மார்பு எப்படிப்பட்டது? ‘வயிரக் குன்றக் கல்லொக்கும் நெஞ்சு.’ அந்த நெஞ்சையும் ஊடுருவிச் சென்றுவிடுகிறது ராம பாணம். கம்பர் மற்றொரு காண்டத்தில் வரப்போகும் ஏழு மராமத்தை துளைத்துச் செல்லும் பகுதிக்கு , இராமனின் முதல் பாணத்திலேயே முன்னுரை கொடுக்கிறார்.

அறிவாற்றல் மிக்க  மேலோர் கூறும் அறம் உள்ளத்தில்  நிலை பெறாது ஒரு காதில் புகுந்து மறுகாது வழிப்போவது போல, தாடகையின் முதுகுப்புறம் ராமனது அம்பு விரைந்து சென்றது என்ற உவமை நயம் உணரத்தக்கது.

இந்தப்பாடலை நிறையப்பேர் ஒரு குறிப்பிட்ட நயத்தை ரசிப்பார்கள்.

சொல்லாய் ஆரம்பித்து பொருளாய்ப் போயிற்று.

சொல் (அம்பு) தாடகை உட்புகுந்து (அறிவிலார்க்கு புலப்படாத) பொருளாய்ச் சென்றது என்பதே அது.

என்னே நயம்!!

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே!


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தசரதரிடம் விஸ்வாமித்திரர் உதவி கோறுதல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Viswamithra seeking Dasaratha's help

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

கையடை படலம்


தசரதரிடம் விஸ்வாமித்திரர் உதவி கோறுதல்

தசரதன், முனிவர் எதிரே நின்று கை கூப்பி வணங்கி, "தங்கள் ஆணையை எதிர்பார்த்து நிற்கின்றேன்" என்றான்.
உடனே முனிவர் பின்வருமாறு பேசினார்.
"அரசே! தவம் செய்வோருக்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றும் அகப்பகைகள் இருந்துகொண்டு அவருக்குத் துன்பம் இழைப்பது போல வனத்துள் நான் இயற்றும் தவ வேள்விக்கு இடையூறாகப் புறப் பகைவர்களாகிய அரக்கர்கள் தவத்தைத் தொடர விடுவதில்லை. அவர்களை ஒழித்து தடை வராதபடி காக்க உன்னுடைய பிள்ளைகள் நால்வரில் கரிய செம்மல் ஒருவனைத் தருவாயாக"

இவ்வாறு விஸ்வாமித்திரர் கூறினார்.


பாடல்

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு 
இடையூறா, தவம் செய்வோர்கள் 
வெருவரச் சென்று அடை காம வெகுளி என
நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி என, உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்


பொருள்

தருவனத்துள்  யான் இயற்றும் = மரங்கள் நிறைந்துள்ள காட்டில் நான் செய்கின்ற;
தவவேள்விக்கு இடையூறா = பெரிய யாகத்துக்கு (நிஷ்காம்யவேள்வி என்பர்) இடையூறாக;
தவம்  செய்வோர்கள்  வெருவர = தவம் செய்பவர்கள் அஞ்சும்படியாக;
சென்று அடைகாம வெகுளி என = அவர்தம் மனத்தைச் சென்று சேர்ந்த காமம் வெகுளி மயக்கங்களைப் போல;
நிருதர் இடைவிலக்காவண்ணம் = அரக்கர்கள் கெடுக்காதபடி;
செருமுகத்துக் காத்தி என = அவர்களோடு செய்யும் போர்முகத்திலே காத்தருள்வாயாக என;
நின் சிறுவர் நால்வரினும் = உன்புத்திரர்கள் நால்வர்களுள்;
கரிய செம்மல் ஒருவனை = கருமை நிறம் பொருந்திய செம்மலாகிய ஒப்பற்றவனை;
தந்திடுதி  என = அளித்திடுவாயாக என்று;
உயிர் இரக்கும் கொடும் கூற்றின் = உயிரைத் தாவெனக் கேட்கும் கொடிய கூற்றுவனைப் போல;
உளையச்சொன்னான் = மன்னன் மனம் வருந்தும்படி முனிவன் கூறினான்.


நயம்

கூற்றுவன் என்றால் எமன் என்று பொருள் படும். இங்கு அற்புதமான ஒர் உவமை மூலம் கவிச்சக்கரவர்த்தி விளக்குகிறார். ஒருவன் உத்தரவில்லாமல் நினைத்த நேரத்தில் உயிரைக் கொண்டுபோகும் எமன், திடீரென்று வந்து 'உன்னுடைய உயிரை எனக்குத் தர வேண்டும் என்று பிச்சை எடுப்பது போல் கேட்டால், அது எவ்வாறு இருக்குமோ, அதுபோல விசுவாமித்திரர் இப்போது கேட்டுக்கொண்டார்.

வேலொடு நின்றான் இடு என்றது போலாம்
கோலொடு நின்றான் இரவு
என்ற திருக்குறள் (அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:552) உவமையை இது நினைவூட்டுகிறது. விசுவாமித்திரன் வேண்டுதலைக் கேட்ட தசரதன் நடுங்கி ஒடுங்கி விட்டான்.

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு 
இடையூறா, தவம் செய்வோர்கள் 
வெருவரச் சென்று அடை காம வெகுளி என
நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி என, உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்

தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Womb of Kousalya Devi being blessed with Lord's Avatara

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

திரு அவதாரப் படலம்

திருமாலின் அவதாரமான ராமபிரான் அவதாரம் செய்ததைக்  கூறும் பகுதியாகும்.  இதில் தயரத  மன்னன்  மகப்  பேறின்றி   இருத்தலை வசிட்ட  முனிவரிடம்  கூறுதலும்.  வசிட்டர் தேவர்களுக்குத்  திருமால் அருளியதைச்  சிந்தித்தலும்  புதல்வரை அளிக்கும்  வேள்வி செய்யத் தயரதனுக்கு  வசிட்டர் கூறுதலும். கலைக்கோட்டு  முனிவரால் வேள்வி நடைபெறுதலும், வேள்வித்தீயில் எழுந்த பூதம் பிண்டம் கொண்டுதருதலும், அப்பிண்டத்தைத்   தயரதன்  தேவியர் மூவருக்கும் பகிர்ந்தளித்தலும், அதன் காரணமாகத் தேவியர்  கருவுறுதலும்  ராமன் முதலிய  நால்வரும் அவதரித்தலும், புதல்வர்களுக்கு வசிட்டர்  பெயர் சூட்டுதலும்  பிள்ளைகளின்  வளர்ச்சியும்-கல்விப்  பயிற்சியும்-யாவரும் போற்ற ராமன் இனிதிருத்தலும் விவரிக்கப்படுகின்றன

கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல்

பாடல்

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே,

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

பொருள்

ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின் = மகப்பேற்றுக்குரிய பருவம் வந்து  சேர்ந்த அந்தக்காலத்தில்;

மா இரும மண்  மகள் மகிழ்வின் ஓங்கிட = மிகப்பெரிய  நிலமகள் மகிழ்ச்சியில் ஓங்கவும்;

வேய்புனர் பூசமும் = பொருந்திய ‘புனர்பூசம்’
என்னும் விண்மீனும்;

விண்ணுளோர்களும் = வானுலகில்  வாழும்
தேவர்களும்;

தூயகற்கடகமும் = தூய்மையானதாகிய கடக ராசியும்;

எழுந்து துள்ளவே = (மகிழ்ச்சியினால்) எழுந்து துள்ளி ஆடவும்;

சித்தர், இயக்கர் = தேவர்களுக்குள் ஒருவகையினர்;

தெரிவை = பெண்ணைக் குறிக்கிறது;

வித்தக முனிவரும் = அறிவில் சிறந்து  விளங்கும் முனிவர்களும்;

விண்ணுளோர்களும் = விண்ணுலகத்தில் உள்ளவர்களும்;

நித்தமும் முறைமுறை நெருங்கி ஆர்ப்புற = நித்திய சூரிகளும் முறைப்படி கூடி ஆரவாரம் செய்யவும்

தத்துறல் ஒழிந்து = வளர்ச்சிகுன்றல் இல்லாமல்;

நீள் தருமம் ஓங்கவே = நெடிய தருமதேவதை இடையீடின்றிப் பெருகி வளரவும்     

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே,

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

தொடரும்...

அன்புடன்

நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தசரதனின் சிறப்பு | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Dasaratha's Greatness

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

தசரதனின் சிறப்பு

கோசல நாட்டை ஆண்ட தசரத மன்னன் மன்னுயிர்களை தன்  உயிர் போல் காத்து வந்தான். அவனுடைய நீதி தவறாத ஆட்சியால் ஏழு உலகங்களையும் ஆண்டு வந்தான்.

பாடல்

தாயொக்கும் அன்பின் தவமொக்கும்
நலம் பயப்பின்
சேயொக்கும் முன் நின்று ஒரு செல்
கதி உய்க்கும் நீரால்
நோயொககும் என்னின்
மருந்தொக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்
எவர்க்கும் அன்னான்

பொருள்

தாயொக்கும்  அன்பின் = அன்பு செலுத்துவதில் பெற்ற தாயைப் போலிருப்பான்

தவமொக்கும் நலம் பயப்பின்=
எல்லோருக்கும் நன்மைகளைச் செய்வதால் தவத்தைப்  போலிருப்பான்

சேயொக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால் =
எல்லோரையும் முன்னால் இருந்து நல்லவழியில் செலுத்துவதால் மகனைப் போலிருப்பான்

நோயொககும் என்னின் மருந்தொக்கும் =
தீமை செய்பவர்களுக்கு நோயைப் போலிருப்பான் எனினும் மருந்தைப் போலவும் இருப்பான்

நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும் =
சூட்சுமமான நூல்களை ஆராயும் போது அறிவைப் போலிருப்பான்

எவர்க்கும் அன்னான் =
எல்லோருக்கும்  தசரத சக்கரவர்த்தி

தாயொக்கும் அன்பின் தவமொக்கும்
நலம் பயப்பின்
சேயொக்கும் முன் நின்று ஒரு செல்
கதி உய்க்கும் நீரால்
நோயொககும் என்னின்
மருந்தொக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்
எவர்க்கும் அன்னான்


தொடரும்...


அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | கோசலை நாட்டின் வளம் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Fertile Kosala Country

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

கோசலை நாட்டின் வளம்

இயற்கை அழகு வாய்ந்த நாட்டின் ஆரமாய் விளங்குவது ஆறே ஆகும்.

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது ஆன்றோர் வாக்கு.

நதியே நாட்டை அழகு செய்கின்றது. நீர்வளம் அமைந்த நிலமே நாடாகுமென்று வள்ளுவர் போற்றுகிறார்.

நாடென்ப நாட வளந்தரு நாடல்ல
நாட வளத்தகு நாடு
                                                  (குறள் 739)


மக்கள் மெய் வருத்தப் பயனளிக்கும் நிலம் நாடாகாதென்றும், இயற்கையின் வளம் சுரக்கும் இனிய நிலமே நாடாகுமென்றும் வள்ளுவர் கூறும் கருத்து நன்கு விளங்குகின்றது.

நதியே நாட்டு உயிராக இருந்ததால் அதன் பெருமையை வள்ளுவர் போற்றுகிறார்.

கம்பன் கோசல நாட்டை ஆற்றினை அணியாக அணிந்த நாடு என்கிறார்.

இதன் மூலமாக அந்த நிலத்தின் தன்மை விளங்குகிறது.

கோசலம் என்றால் மயில். மயில்கள் நிறைய உள்ள நாடு. மயில் நிறைய இருக்கிறது என்றால், மழை நன்றாக பெய்கிறது என்று அர்த்தம். மழை பெய்தால், பயிர் விளையும், பசி இருக்காது, கலையும் பக்தியும் நிறைந்து இருக்கும். சண்டை சச்சரவு இருக்காது.

அந்த நாட்டின் மக்கள் நெறி பிறழாமல் வாழ்ந்தார்கள்.

மனிதர்களை குற்றங்களுக்கு உட்படுத்துவது புலன்கள், அதாவது அவை தூண்டும் ஆசைகள்.

புலன்கள் அதற்குரிய பொருளை பார்த்துவிட்டால் உடனே அம்பு போல் பாயும். பாய்கின்ற அம்பு  இலக்கை தைக்கும்; விட்ட அம்பை திருப்பி பிடிக்க முடியாது;

ஐம்பொறிகளை அம்பு என்கிறார் கம்பர். தைப்பதால்; விட்டால் பிடிக்க முடியாது என்பதால்; வேகமாக செல்வதால்.

பெண்களுக்கு கண்கள், ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டும் வலிமையுடையவை.
பெண்களின் கண்கள் நெறியில் நிற்கா விட்டால், ஆண்களின் ஐம்பொறிகளும் நிலையில் நில்லாது.

அப்படிப்பட்ட வலிமை பெற்ற கண்கள், கோசலை நாட்டில் ஒரு நெறியில் நின்றன.

பாடல்

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசுஅலம்பும் முலையவர் கண்எனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவோம்

        (ஆற்றுப்படலம் பாடல் 12)

என்கிறார் கம்பர்.

பொருள்

சலம் = நடுக்கம், உதறுதல், அலைபாயுதல்
ஆ + சலம் = மிகுந்த (அ) பெரிய சலம்.

புலன்கள் ஒன்றில் ஒன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். (விளக்கிருக்க தீ தேடும் மனம்)

புரி = புரிகின்ற, செல்கின்ற, அலைகின்ற

ஐம் பொறி = ஐந்து பொறிகளான

வாளியும் = அம்புகளும்

காசு அலம்பு = வைரம் வைடூரியம் போன்ற விலை உயர்ந்த மணிகளால் ஆன கழுத்தில் அணியும் அணிகலன்கள் அசைந்து ஆட

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து என்கிறது  திருப்பாவை.

முலையவர் = மார்பங்களை உடையவர்  (பெண்கள்)

கண் எனும் = கண்கள் என்ற

பூசல் அம்பும் = சண்டை பிடிக்கும் அம்பும்.

நெறியின் புறம் செலாக் = வழி தவறி செல்லாத

கோசலம் = கோசலம் என்ற நாட்டின்

புனை ஆற்று அணி கூறுவாம் = ஆற்றினை அணியாக அணிந்த நிலை கூறுவாம்.

அங்கு ஓடும் நதி, அந்த ஊருக்கு மாலை போட்ட மாதிரி இருக்கிறதாம்.

நயம்

ஒரு நாட்டின் வருணனைதான் என்றாலும் எவ்வளவு நுணுக்கமாக மக்களின் வாழ்வியல் நெறியை விளக்குகிறார்.

எவ்வளவோ வளங்களைப் பற்றி பின்னே கூறினாலும்,  அவை எல்லாவற்றையும் விட மிக சிறந்த வளம் எது என்றால்,  அம்பும் நெறியின் புறஞ் செலாக் கோசலம் என்பதுதான்.

எனவே, மக்களாக வாழப் பிறந்தவர்கள்,  மிக பண்புடையவர்களாக,  பொறிபுலன்களை அடக்கி ஆள்பவராக வாழ்வது தான் அவர்கள் சிறந்தவர் ஆவதற்குரிய அடிப்படையாகும், என்பதை இப்பாடலின் வழியாக கம்பர் மெய்ப்பித்துக் காட்டியிருப்பதை உணர முடிகிறது.

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசுஅலம்பும் முலையவர் கண்எனும்
பூசல் அம்பும் நெறியின் புறஞ் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவோம்


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

Friday, July 3, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | நம்மாழ்வார் துதி | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Nammazhvar Thudhi

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

நம்மாழ்வார் துதி

பாடல்

தருகை நீண்ட
தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன்தன் கதை

திரு கை வேலைத் தரைமிசைச் செப்பிட,
குருகை நாதன் குறை
கழல் காப்பதே.

பொருள்

தருகை (தரும் செய்கை, கொடை தன்மை, இல்லை என்று வரும் வறியவர்க்கு வாரி வழங்கி செழுமை படுத்துதல்)

நீண்ட (அதிகமான, மற்ற யாரையும் விட சிறந்த)

தயரதன்தான் தரும் (தசரத மன்னனின் தூய தமிழ் பதம் தயரதன்)

அத்தகு மன்னன் தரும் (பிறப்பித்து தரும்)

இரு கை வேழத்து (இரண்டு கைகள் உடைய யானையை போலே)

இராகவன் தன் கதை (அவ்வாறாக பட்ட இராகவன் என்ற இராம பிரான் அவர்களின் கதை)

திரு கை வேலைத் தரைமிசைச் செப்பிட  (வேலை: கடல்; தரை: பூமி, மிசை: சூழ்ந்து; கடல் சூழ்ந்த இந்த உலகில் செப்பிட: உரைத்திட)

குருகை நாதன் (திருக்குருகூரில் தோன்றிய தலைவராகிய நம்மாழ்வார்)

குறை கழல் காப்பதே (ஒலிக்கும்  சிலம்பு அணியபட்டிருக்கும்  திருவடி காக்க வேண்டும்!)

தருகை நீண்ட 
தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து
இராகவன்தன் கதை

திரு கை வேலைத் தரைமிசைச் செப்பிட,
குருகை நாதன் குறை
கழல் காப்பதே

தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

Thursday, July 2, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | காண்டங்களும் படலங்களும் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Retelling of Rama Kathai - Divisions & Parts

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தமிழில் 'இராமாவதாரம்' என்னும் பெயரில் காப்பியமாக்கியவர் கம்பர்.
இதனால் இவர் ஆக்கிய இராமனின் காதை கம்பராமாயணம் (கம்ப இராமாயணம்) என வழங்கப்படுகின்றது.

காப்பிய வளம், கற்பனைச் செறிவு, பாத்திரப் படைப்பு, இலக்கிய நயம் முதலியவற்றால் இந்த நூல் தமிழ் இலக்கியங்களில் தலையாய இடம் பெற்றுள்ளது.

தமிழ்ப் பண்பாட்டை இந்த நூலில் வரும் பல்வேறு மக்கள் மூலமும் காட்சிகள் மூலமும் சித்தரித்து, ஒப்பிட்டு, விளக்கி, வால்மீகி படைத்த கதையின் போக்கை தமிழ்ப்பண்பாட்டு இழையோட கம்பர் இந்தக் காப்பியத்தை உருவாக்கியுள்ளார்.

கம்ப இராமாயணம், பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களாகப் பிரிக்கபட்டுள்ளது.

காண்டங்கள் என்பவை காப்பியத்தின் பெரும்பிரிவுகளைக் குறிக்கும்.

ஒவ்வொரு காண்டமும் உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அத்தகு உட்பிரிவுகளுக்குப் படலம் என்று பெயர்.

இந்த ஆறு காண்டங்களில் 123 படலங்களும், 10,000த்திற்கு மேற்பட்ட பாடல்களும் உள்ளன.


பாலகாண்டம்

'பால' என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.


பாயிரம்

1) ஆற்றுப் படலம்
2) நாட்டுப் படலம்
3) நகரப் படலம்
4) அரசியற் படலம்
5) திரு அவதாரப் படலம்
6) கையடைப் படலம்
7) தாடகை வதைப் படலம்
8) வேள்விப் படலம்
9) அகலிகைப் படலம்
10) மிதிலைக் காட்சிப் படலம்
11) கைக்கிளைப் படலம்
12) வரலாற்றுப் படலம்
13) கார்முகப் படலம்
14) எழுச்சிப் படலம்
15) சந்திரசயிலப் படலம்
16) வரைக்காட்சிப் படலம்
17) பூக்கொய் படலம்
18) நீர் விளையாட்டுப் படலம்
19) உண்டாட்டுப் படலம்
20) எதிர்கொள் படலம்
21) உலாவியற் படலம்
22) கோலம்காண் படலம்
23) கடிமணப் படலம்
24) பரசுராமப் படலம்


அயோத்தியா காண்டம்

இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப் படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

25) மந்திரப் படலம் (1)
26) மந்தரை சூழ்ச்சிப் படலம் (2)
27) கைகேயி சூழ்ச்சிப் படலம் (3)
28) நகர் நீங்கு படலம் (4)
29) தைலம் ஆட்டு படலம் (5)
30) கங்கைப் படலம் (6)
31) குகப் படலம் (7)
32) வனம் புகு படலம் (8)
33) சித்திரகூடப் படலம் (9)
34) பள்ளிப்படைப் படலம் (10)
35) ஆறுசெல் படலம் (11)
36) கங்கை காண் படலம் (12)
37) திருவடி சூட்டு படலம் (13)


ஆரணிய காண்டம்

இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.

38) விராதன் வதைப் படலம் (1)
39) சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் (2)
40) அகத்தியப் படலம் (3)
41) சடாயு காண் படலம் (4)
42) சூர்ப்பணகைப் படலம் (5)
43) கரன் வதைப் படலம் (6)
44) சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் (7)
45) மாரீசன் வதைப் படலம் (8)
46) இராவணன் சூழ்ச்சிப் படலம் (9)
47) சடாயு உயிர் நீத்த படலம் (10)
48) அயோமுகிப் படலம் (11)
49) கவந்தன் படலம் (12)
50) சவரி பிறப்பு நீங்கு படலம் (13)


கிட்கிந்தா காண்டம்

சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடி அலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்றடைந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.

51) பம்பை வாவிப் படலம் (1)
52) அனுமப் படலம் (2)
53) நட்புக் கோட்படலம் (3)
54) மராமரப் படலம் (4)
55) துந்துபிப் படலம் (5)
56) கலன் காண் படலம் (6)
57) வாலி வதைப் படலம் (7)
58) தாரை புலம்புறு படலம் (8)
59) அரசியற் படலம் (9)
60) கார்காலப் படலம் (10)
61) கிட்கிந்தைப் படலம் (11)
62) தானை காண் படலம் (12)
63) நாட விட்ட படலம் (13)
64) பிலம் புக்கு நீங்கு படலம் (14)
65) ஆறு செல் படலம் (15)
66) சம்பாதிப் படலம் (16)
67) மயேந்திரப் படலம் (17)


சுந்தர காண்டம்

கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.அதன் பதினான்கு படலங்கள் பின்வருமாறு:

68) கடல் தாவு படலம் (1)
69) ஊர் தேடு படலம் (2)
70) காட்சிப் படலம் (3)
71) உருக் காட்டு படலம் (4)
72) சூடாமணிப் படலம் (5)
73) பொழில் இறுத்த படலம் (6)
74) கிங்கரர் வதைப் படலம் (7)
75) சம்புமாலி வதைப் படலம் (8)
76) பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் (9)
77) அக்ககுமாரன் வதைப் படலம் (10)
78) பாசப் படலம் (11)
79) பிணி வீட்டு படலம் (12)
80) இலங்கை எரியூட்டு படலம் (13)
81) திருவடி தொழுத படலம் (14)


யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

82) கடல் காண் படலம் (1)
83) இராவணன் மந்திரப் படலம் (2)
84) இரணியன் வதைப் படலம் (3)
85) வீடணன் அடைக்கலப் படலம் (4)
86) ஒன்னார் வலிஅறி படலம் (5)
87) கடல் சீறிய படலம் (6)
88) வருணன் அடைக்கலப் படலம் (7)
89) சேது பந்தனப் படலம் (8)
90) ஒற்றுக் கேள்விப் படலம் (9)
91) இலங்கைகாண் படலம் (10)
92) இராவணன் வானரத்தானை காண் படலம் (11)
93) மகுட பங்கப் படலம் (12)
94) அணிவகுப்புப் படலம் (13)
95) அங்கதன் தூதுப் படலம் (14)
96) முதற் போர் புரி படலம் (15)
97) கும்பகருணன் வதைப் படலம் (16)
98) மாயா சனகப் படலம் (17)
99) அதிகாயன் வதைப் படலம் (18)
100) நாகபாசப் படலம் (19)
101) படைத் தலைவர் வதைப் படலம் (20)
102) மகரக்கண்ணன் வதைப் படலம் (21)
103) பிரமாத்திரப் படலம் (22)
104) சீதை களம்காண் படலம் (23)
105) மருத்துமலைப் படலம் (24)
106) களியாட்டுப் படலம் (25)
107) மாயா சீதைப் படலம் (26)
108) நிகும்பலை யாகப் படலம் (27)
109) இந்திரசித்து வதைப் படலம் (28)
110) இராவணன் சோகப் படலம் (29)
111) படைக் காட்சிப் படலம் (30)
112) மூலபல வதைப் படலம் (31)
113) வேல் ஏற்ற படலம் (32)
114) வானரர் களம் காண் படலம் (33)
115) இராவணன் களம் காண் படலம் (34)
116) இராவணன் தேர் ஏறு படலம் (35)
117) இராமன் தேர் ஏறு படலம் (36)
118) இராவணன் வதைப் படலம் (37)
119) மண்டோதரி புலம்புறு படலம் (38)
120) வீடணன் முடி சூட்டு படலம் (39)
121) பிராட்டி திருவடி தொழுத படலம் (40)
122) மீட்சிப் படலம் (41)
123) திருமுடி சூட்டு படலம் (42)


யாருக்கு என்ன எப்போது நேரவேண்டும், கிடைக்கவேண்டும், செய்யவேண்டும் என்று பரம்பொருளுக்கு தீர்க்கமாக  தெரியும்.

தானே பல்வேறு வடிவங்களில் சென்று அவர்களுக்கு ஆசிவழங்கி அதை அடையச் செய்வார். அடுத்த கணம் மறைந்து விடுவார்.

அதைப்போல, கம்பருக்கும் நமக்கும் உண்டான தொடர்பு பள்ளியில் படித்த இராமாயணம் என்றாலும், பின்னர் அங்கங்கே வாழ்வில் பல இடங்களில் அவரைபற்றி பேசுவதை கேட்டும், சில விவரங்களை ஏதேதோ புத்தகங்களில் யாரோ எழுதியதை படித்தும் - கம்பர் மேலும், ஸ்ரீ இராமர் மேலும்,  ஒரு இனம் புரியாத பக்தி ஏற்பட்டது.

அப்படிப்பட்ட ஸ்ரீ இராமரை, கம்பர் காதலொடு பாடும் ஸ்ரீ இராகவனை, பற்றி எழுதும் பாக்கியம் எனக்கு வாழ்வில் கிடைத்தது அந்த பரம்பொருள்  அருளாலே தான்.

'எவருடைய அனுக்கிரக பலம் கொண்டு ஸ்ரீ ஹனுமான் விளையாட்டாகவே கடலை தாண்டி கடந்து, இலங்கையை அடைந்து, ராம பத்தினியை கண்டு,உரையாடி, அரக்கர்களின் அசோக வனத்தை கபளீகரம் செய்து, அக்ஷகுமாரன் முதலியோரை சம்ஹரித்து, பத்து தலையனை கண்டு உரையாடி, அவனது நகரத்திற்கு எரியூட்டி, மீண்டும் கடலை தாண்டி கடந்து, தென்திசை கடல் வரை தன்னுடன் சென்ற வானரர்களுடன் கூடி, எவரை நமஸ்கரித்தாரோ, அந்த ஸ்ரீ ராமச்சந்திரரை தொழுகிறேன்' 🙏

இதில் சில பாடல்களையும் அதன் சொற்சுவை பொருட்சுவை ஆகியவற்றை என்னால் இயன்ற வரை எழுதி பகிர்ந்துள்ளேன்.


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி



The original version of Ramayana was written by Valmiki. 

Tamil Epic Rama-Avataram or Rama-Kathai, written by Kambar is not a verbal translation of the Sanskrit epic by Valmiki, but a retelling of the story of Lord Rama. This is generally referred as Kamba Ramayanam.

Kamba Ramayanam of Kambar is a Tamil epic of about 10,000 + stanzas. 

It is divided into 6 parts (called as kandams), and further divided into 123 sub-parts (called as padalams), and each padalam has many songs & verses.