Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Sequence depicting spontaneous meet of Rama & Sita

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

மிதிலை காட்சி படலம்

இராமன் மிதிலை நகர் வீதியில் வருகிறான். மாடத்தில் சீதை தோழிகளோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். கை தவறி பந்து வீதியில் செல்லும் இராமன் மேல் விழுந்து விடுகிறது.

மாடத்தில் இருந்து சீதை எட்டிப் பார்க்கிறாள். பந்து எங்கிருந்து வந்தது என்று இராமன் மேலே பார்க்கிறான். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

கம்பன், அந்த ஒரு கணத்தை, தன் வருணனையில் அருமை காட்சியாகச் சொல்கிறார்.

பாடல்

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்.

பொருள்

எண்ண அரு = எண்ணிப்பார்க்க அருமையான, எண்ணில் அடங்காத

நலத்தினாள் = நல்ல குணங்களை உடையவள்

இனையள் = இந்தத் தன்மை உடையவள்

நின்றுழி = நின்ற பொழுது

கண்ணொடு கண் இணை கவ்வி = இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி

ஒன்றை ஒன்று உண்ணவும் = ஒன்றை மற்றொன்று உண்ணவும்

நிலைபெறாது உணர்வும் ஒன்றிட = நிலை பெறாத உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் = இராமனும்  நோக்கினான்
அவளும் நோக்கினாள் = ஜானகி தேவியும் நோக்கினாள்

நயம்

இந்தப் பாடலை பல நூறு முறை, வெவ்வேறு ஊடகங்கள் மூலம் எல்லோரும் கேட்டு இருப்போம். எனினும் இது வெறும் காதல் பாடல் தானே என்று ஒதுக்க முடியாத வகையில், இதில் நயமும் புத்துணர்வும் புகுத்தி ஆள்கிறார் கம்பர்.

ஒரு பெண், முன் பின் தெரியாத ஒருவனை, வீதியில் நடந்து போகும் ஆணை பார்க்கலாமா? , என்ற தேவையற்ற விவாதங்களுக்கு இடம் அளிக்காமல் சீதையின் நற்பண்பை முன்னிருத்தி, 'கணக்கில் அடங்காத நல்ல குணங்கள் உள்ள சீதை' என்று கூறுகிறார் கம்பர்.

பொறுமை, கருணை, அன்பு, பாசம், நேசம், அருள் என்று எத்தனை நல்ல குணங்கள் உண்டோ அதற்கெல்லாம் மேலும்  நல்ல குணங்கள் உள்ளவள் சீதை. 

"எண்ண அரு நலத்தினாள் இனையள்"

சரி , அப்படி என்றால் இராமன் சீதையை பார்த்தாரா?

அண்ணல் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்று சொல்லி இருந்தால் முதலில் இராமன்  பார்த்தான், பின் சீதையும் பார்த்தாள் என்று வரும்.

அவள் நோக்கினாள் . அண்ணலும் நோக்கினான் என்றால் சொல்லி இருந்தால் முதலில் சீதை  பார்த்தாள். பின் இராமன் பார்த்தான் என்று வரும்.

கம்பன் அப்படி சொல்லவில்லை.

அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள் என்கிறான்.

இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

கண்கள் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது. அவர்கள் உணர்வுகள் ஒன்று பட்டது.

"அண்ணலும் நோக்கினாள் , அவளும் நோக்கினாள்" என்கிறான் கம்பன்.

அதாவது,  பார்வைகள் சந்தித்தன... கலந்தன... கண்கள் கவ்விக் பிடித்துக் கொண்டன என்கிறார் கம்பர்.

அவர்கள் மனதில் என்ன எண்ணம் ஓடியது? அழகு, காமம், செல்வம் என்பனவா?

இல்லை! அதெல்லாம் சிற்றின்பர்கள் மனப்போக்கு.

பின் அவர்கள் என்னதான் நினைத்தார்கள்?

ஒன்றுமே நினைக்கவில்லை என்கிறான் கம்பன்.

"நிலைபெறாது உணர்வும் ஒன்றிட"

உணர்ச்சிகளின் தன்மை ஒரு நிலையில் நிற்காத குணம் தான். அது அலைந்து கொண்டே இருக்கும்.

ஆனால், அவர்கள் பார்த்த அந்த ஒரு கணத்தில் உணர்ச்சிகள் ஒன்று பட்டுவிட்டன. வேறு எந்த எண்ணமும் இல்லை. ஒன்றி விட்டது.

இத்தனையும் நிகழ்ந்தது ஒரு நொடியில்.  அல்லது அதற்கும் குறைவான நேரத்தில்.

இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு, காதல் கொள்ளுதல் - அந்த தெய்வீகம், கம்பனை தவிர, யாரால் இப்படி வர்ணிக்க முடியும்?

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்.


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

No comments: