Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தசரதரிடம் விஸ்வாமித்திரர் உதவி கோறுதல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Viswamithra seeking Dasaratha's help

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

கையடை படலம்


தசரதரிடம் விஸ்வாமித்திரர் உதவி கோறுதல்

தசரதன், முனிவர் எதிரே நின்று கை கூப்பி வணங்கி, "தங்கள் ஆணையை எதிர்பார்த்து நிற்கின்றேன்" என்றான்.
உடனே முனிவர் பின்வருமாறு பேசினார்.
"அரசே! தவம் செய்வோருக்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றும் அகப்பகைகள் இருந்துகொண்டு அவருக்குத் துன்பம் இழைப்பது போல வனத்துள் நான் இயற்றும் தவ வேள்விக்கு இடையூறாகப் புறப் பகைவர்களாகிய அரக்கர்கள் தவத்தைத் தொடர விடுவதில்லை. அவர்களை ஒழித்து தடை வராதபடி காக்க உன்னுடைய பிள்ளைகள் நால்வரில் கரிய செம்மல் ஒருவனைத் தருவாயாக"

இவ்வாறு விஸ்வாமித்திரர் கூறினார்.


பாடல்

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு 
இடையூறா, தவம் செய்வோர்கள் 
வெருவரச் சென்று அடை காம வெகுளி என
நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி என, உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்


பொருள்

தருவனத்துள்  யான் இயற்றும் = மரங்கள் நிறைந்துள்ள காட்டில் நான் செய்கின்ற;
தவவேள்விக்கு இடையூறா = பெரிய யாகத்துக்கு (நிஷ்காம்யவேள்வி என்பர்) இடையூறாக;
தவம்  செய்வோர்கள்  வெருவர = தவம் செய்பவர்கள் அஞ்சும்படியாக;
சென்று அடைகாம வெகுளி என = அவர்தம் மனத்தைச் சென்று சேர்ந்த காமம் வெகுளி மயக்கங்களைப் போல;
நிருதர் இடைவிலக்காவண்ணம் = அரக்கர்கள் கெடுக்காதபடி;
செருமுகத்துக் காத்தி என = அவர்களோடு செய்யும் போர்முகத்திலே காத்தருள்வாயாக என;
நின் சிறுவர் நால்வரினும் = உன்புத்திரர்கள் நால்வர்களுள்;
கரிய செம்மல் ஒருவனை = கருமை நிறம் பொருந்திய செம்மலாகிய ஒப்பற்றவனை;
தந்திடுதி  என = அளித்திடுவாயாக என்று;
உயிர் இரக்கும் கொடும் கூற்றின் = உயிரைத் தாவெனக் கேட்கும் கொடிய கூற்றுவனைப் போல;
உளையச்சொன்னான் = மன்னன் மனம் வருந்தும்படி முனிவன் கூறினான்.


நயம்

கூற்றுவன் என்றால் எமன் என்று பொருள் படும். இங்கு அற்புதமான ஒர் உவமை மூலம் கவிச்சக்கரவர்த்தி விளக்குகிறார். ஒருவன் உத்தரவில்லாமல் நினைத்த நேரத்தில் உயிரைக் கொண்டுபோகும் எமன், திடீரென்று வந்து 'உன்னுடைய உயிரை எனக்குத் தர வேண்டும் என்று பிச்சை எடுப்பது போல் கேட்டால், அது எவ்வாறு இருக்குமோ, அதுபோல விசுவாமித்திரர் இப்போது கேட்டுக்கொண்டார்.

வேலொடு நின்றான் இடு என்றது போலாம்
கோலொடு நின்றான் இரவு
என்ற திருக்குறள் (அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:552) உவமையை இது நினைவூட்டுகிறது. விசுவாமித்திரன் வேண்டுதலைக் கேட்ட தசரதன் நடுங்கி ஒடுங்கி விட்டான்.

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு 
இடையூறா, தவம் செய்வோர்கள் 
வெருவரச் சென்று அடை காம வெகுளி என
நிருதர் இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின் சிறுவர்
நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி என, உயிர் இரக்கும்
கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்

தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

No comments: