Tuesday, July 7, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | பரசுராமன் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Parasurama challenging Rama

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

பரசுராமப் படலம்

இராமன் சீதை மணம் முடிந்து இருவரும் ரதத்தில் அயோத்தி நோக்கி செல்கையில், பரசுராமன் இடைமறித்தார்.

பரசுராமன் கோபமாக ”நான் உன் குல க்ஷத்திரிய அரசர்களைக் கொன்று வென்ற உலகம் முழுவதையும் முனிவர்களுக்குக் கொடுத்துவிட்டு, வேறு பகைவர்கள் இல்லையென்று எண்ணி, துறவு பூண்டு ஒரு மலையில் தங்கி தவம் செய்துகொண்டிருந்தேன். நீ வில்லை முறித்த ஓசை என் செவியில் விழுந்தது. அந்த ஆரவாரம் என் தவத்தைக் கலைத்துவிட்டது. 'இன்னும் வீரனான ஒரு ஷத்ரியன் எங்கோ உயிரோடு இருக்கிறான்’ என்று கோபங் கொண்டு இங்கே வந்தேன். நீ ஆற்றல் உள்ளவன் என்றால் உன்னோடு போர் செய்வேன். அதற்கு முன்னால், உன்னால் முடிந்தால் முதலில் இந்த வில்லை வளைத்துப் பார்” என்கிறான்.

பரசுராமன் இராமனை நோக்கி, “இராமா, நீ ஒடித்த வில் ஊனமுற்ற வில். அதை நீ முறித்ததெல்லாம் பெரிய வீரத்தில் சேர்த்தியில்லை. விஷ்ணுதனுசு இதோ இருக்கிறது. இதை உன்னால் வளைக்க முடியுமா?” என்று சவால் விடுகிறான்.

ஒருவர் வெற்றியையும், வெற்றிச் செயலையும் எப்படி ஆணவத்தில் சிலர் இழித்தும் பழித்தும் கூறுவாரோ அப்படியே பேசுகிறான் பரசுராமனும்.

புன்சிரித்த ராமன், பரசுராமனிடம் வில்லைக் கேட்கிறான்.

செருக்கோடும் தவ வேகத்தோடும் கோபவெறியோடும் தோன்றிய பரசுராமன், தன் கையிலிருந்த விஷ்ணு தனுசை இராமன் கையில் கொடுக்கிறான்.

அப்போது இராமன் கோபம் கொள்ளாமல் அதே சிரிப்பு மாறாமல் அவ்வில்லை பெற்று, சுலபமாக நாணேற்றினான்.

வில் வளைத்த இராமன், பரசுராமனைப் பார்த்து, "உலகின் அரசர்களை எல்லாம் கொன்றாய். என்றாலும் வேத விதை முனிவன் மகன் நீ ஆதலால் உன்னைக் கொல்லக் கூடாது. ஆனால் வளைத்த வில்லுக்கு இலக்கு வேண்டுமே, அது யாது? என்று இராமன் கேட்டான்.


பாடல்

எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!' என,
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே

பொருள்

எய்த அம்பு = நீ இப்போது தொடுக்கும் அம்பு;

இடை பழுது எய்திடாமல் = இடையே குறை நேரா வண்ணம்;

என் செய் தவம் யாவையும் = நான் செய்த தவத்தின் பயன் முழுவதையும்;

சிதைக்க என = கொள்வதாக என்று சொல்ல;

கை அவண் நெகிழ்தலும் = (அப்போது) இராமபிரானின் கை நெகிழ்ந்த;

கணையும் சென்று = அம்பும் உடனே சென்று;

அவன் மை அறு தவம் = பரசுராமர் ஈட்டியிருந்த தவத்தின் பயன்கள்;

எலாம் வாரி, மீண்டதே = யாவற்றையும் வாரிக் கவர்ந்து கொண்டு அம்பறாத் தூணியை மீண்டும் வந்தடைந்தது.

நயம்

இராமன் நாணேற்றியே கணமே, பரசுராமன் கர்வம் அழிந்து விட்டது. ஆணவம் அகன்று விட்டது.

"இந்த வில்லில் தொடுத்த அம்பு வீண் போவதன்று. எனவே இதற்கு இலக்கு யாது? விரைவாகச் சொல்” என்ற இராமனின் அந்தக் கேள்விக்கு "தன் தவமே இலக்கு" என்று கூறுகிறான் கர்வம் அழிந்த பரசுராமன்.

நான் செய்த தவத்தின் பயனை உன் அம்புக்கு இலக்காகத் தருகிறேன் என்று பரசுராமன் கூற, இராமன் அம்பு பரசுராமன் தவத்தையெல்லாம் வாரிக்கொண்டு இராமனிடம் திரும்பியது.

இராமனை வெல்ல வந்தவனின் மனதை, அன்பால் இராமன் வென்று விட்டான். இராமனின் அன்பு நெறி பகைவன் மனத்தையும் மாற்றிப் புனிதனாக்கியது.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?" என்பது வள்ளுவர் வாக்கு.

"நீ நினைப்பவை எல்லாம் நிறைவேறட்டும்" என்று இராமனை வாழ்த்தித் தொழுது போகிறான் பரசுராமன்.

இராமனின் ஆணவமற்ற தன்மை, பொறுமை, அன்பு, மரியாதை, தைரியம், வீரம், வேகம், விவேகம் போன்ற பல குணாதிசயங்களை ஒரு பாடலில் அடக்கியாள்வது கவி சக்கரவர்த்தி கம்பருக்கு மட்டுமே சாத்தியம்.

எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!' என,
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

1 comment:

Unknown said...

Each and every incidence from Ramayana teaches a lesson to us
You have expressed it in a beautiful way👍