Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தாடகை வதை | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Vanquishing of Demon Tataka

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

தாடகை வதைப் படலம்

ராமனுடைய வில்லாற்றல் முதன்முறையாக விஸ்வாமித்திரர் மூலமாக வெளிப்படுகிறது.

தன் யாகம் காக்கத் தசரதனிடம் இராமனைத் தரும்படி கேட்கிறார். யாகசாலையைப் பாதுகாக்கும் பொறுப்பை இராமன் ஏற்க வேண்டும் என்கிறார். சிறுவனான இராமனை அவருடன் அனுப்ப முதலில் மன்னன் ன தயங்கினாலும் வசிஷ்டரின் அறிவுரையின்படி அனுப்பி ன வைக்கிறான் தசரதன்.

யாகரட்சணத்திற்கு முன்பாகவே ராமன் தாடகையை எதிர்கொள்ள நேரிடுகிறது. “இந்தத் தாடகை முறைநின்ற உயிரெல்லாம் தன் உணவெனக் கருதும் தன்மையுடையவள்” என்று விஸ்வாமித்திரர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தாடகை பயங்கர உருவம் பெற்று வருகிறாள்.

இப்படி வரும் தாடகையை அம்பு எய்து வதைக்க வேண்டும் என்று விஸ்வாமித்திர்ர் எண்ணுகிறார். ராமனுக்கும் முனிவரின் எண்ணம் புரிகிறது. ஆனாலும் ராமன் உடனே அம்பு தொடுக்கவில்லை. ஏன்? “பெண்ணென மனத்திடை பெருந்தகை நினைத்தான்.” ஆனால் முனிவரோ, “ராமா, உயிர்க்குலத்தையே கருவறுத்து வரும் இவளையா நீ பெண்ணென்று நினைக்கிறாய்? இவளுடைய பாவச்சுமையை ஒழிக்க வேறு வழியே இல்லை. “ஆறி நிற்பது அருளன்று.” எனவே அரக்கியைக் கொன்றுவிடு என்று ஆணையிடுகிறார். இதற்குள் தாடகை பாறைக்கற்கலை வீசிவிடுகிறாள். எனவே தற்காப்புக்காக இராமன் அம்பு தொடுக்கிறான்.


பாடல்

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே!


பொருள்

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம் = நிறைமொழி  மாந்தரின் சாபச் சொற்களை ஒத்த கடிய வேகமுடைய ஒரு சுடுசரத்தை
கரிய செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் = கரிய நிறமும், அழகும் உடைய, இராமபிரான் இருள் போன்ற நிறத்தை உடைய தாடகையின் மீது செலுத்தி  விடவே;
வயிரக் குன்றக்கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது = அந்த அம்பு வைரம் பாய்ந்த கல் போன்ற அத்தாடகையின்    நெஞ்சில் தங்கியிராமல்;
அப்புறம்  கழன்று = நெஞ்சில் பாய்ந்து பின் முதுகின் புறமாகக் கழன்று;
கல்லாப்புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என = கல்வி அறிவில்லாத கீழோருக்கு நல்லவர்கள் சொன்ன நல்ல பொருளைப் போல;
போயிற்று அன்றே = ஓடிப்போய்விட்டது

நயம்

‘சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்’ என்கிறான் கம்பன்.

வேகத்துக்கு உவமையாக  காற்றின் வேகம் , மனோவேகம் என்பது ஒரு பொதுவான உவமை. மனதில் ஒன்றை நினைத்த தருணத்தில், அங்கே இருப்போம் நாம். நினைவுத்துணுக்கு முடிவதற்கு முன்பே நம்மால் இமயமலைக்கோ, வேறு உலகத்திற்கோ, சந்திரனுக்கோ கூடச் சென்றுவிடமுடியும்.

அதையும் தாண்டிய வேகம் எது? அதுதான் சொல்

வாழ்வில் பல இடங்களில் நாம் பேசியதற்காக மன்னிப்பு கேட்கும் பொழுது, 'யோசிக்காம பேசிட்டேன்' என்போம்.

சொல், சிந்தனை முடிந்து வரும் முன்பே சில வேளைகளில் கிளம்பிச் சென்றுவிடும். ஆகையால் இராமன் அம்பு சொல் மாதிரி கிளம்பிச்சென்றதாம். (இது புலவர் கீரன் காட்டிய நயம்)


‘சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரம்’ என்கிறான் கம்பன்.

யாருடைய சொல்?
நிறைமொழி  மாந்தரின்
சாபச் சொற்களைப் போல  (விசுவாமித்திர மகரிஷி போன்றவர்களின் சாபச்சொல் எப்படி உடனே தவறாமல் பலிக்குமோ அதுபோல் அவ்வளவு கடும் வேகமாக) இருந்ததாம் அந்த சுடுகின்ற அம்பு (சுடுசரம்)!

இராமனுடைய அம்புக்குக் கடுமை, வேகம், அருமை ஆகிய பண்புகள் உண்டு என்பதை உணர்த்தினார் கம்பர்.

கரிய செம்மல் (இதில் ஒரு நயம் கருமை-செம்மை) என்று கருப்பான இராகவனைக் குறிப்பிட்டவர் தாடகையின் பண்புக்கு இணையாக அல் (இருள்) ஒக்கும் என்று நிற உவமை சொல்கிறார்.

அந்த அம்பு எப்படிச் சென்றது?

‘கல்லாப் புல்லோர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என’ – கல்லாத மூடர்களுக்கு அறிவாற்றல் நிறைந்தவர்கள் எவ்வளவுதான் புத்திமதி சொன்னாலும் அது அவர்கள் மனதில் கொஞ்சம் கூடத் தங்காமல் எப்படி உடனே போய்விடுமோ அதுபோல ராமபாணம் தாடகையின் மார்பை ஊடுருவிச் சென்று விட்டதாம்.

அந்த மார்பு எப்படிப்பட்டது? ‘வயிரக் குன்றக் கல்லொக்கும் நெஞ்சு.’ அந்த நெஞ்சையும் ஊடுருவிச் சென்றுவிடுகிறது ராம பாணம். கம்பர் மற்றொரு காண்டத்தில் வரப்போகும் ஏழு மராமத்தை துளைத்துச் செல்லும் பகுதிக்கு , இராமனின் முதல் பாணத்திலேயே முன்னுரை கொடுக்கிறார்.

அறிவாற்றல் மிக்க  மேலோர் கூறும் அறம் உள்ளத்தில்  நிலை பெறாது ஒரு காதில் புகுந்து மறுகாது வழிப்போவது போல, தாடகையின் முதுகுப்புறம் ராமனது அம்பு விரைந்து சென்றது என்ற உவமை நயம் உணரத்தக்கது.

இந்தப்பாடலை நிறையப்பேர் ஒரு குறிப்பிட்ட நயத்தை ரசிப்பார்கள்.

சொல்லாய் ஆரம்பித்து பொருளாய்ப் போயிற்று.

சொல் (அம்பு) தாடகை உட்புகுந்து (அறிவிலார்க்கு புலப்படாத) பொருளாய்ச் சென்றது என்பதே அது.

என்னே நயம்!!

சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே!


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

2 comments:

Nagavalli.T. said...

தங்கள் தமிழ் புலமை மெய் சிலிர்க்க வைக்கிறது. பன்முக நுண்ணறிவு பெற்ற தங்களை வாழ்த்துவது எனக்கு பேருவகை.நயம்பட சிறப்பாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். தலைப்பில் இராமயணம் என்று இருப்பதை சரிபார்க்க.

Prasanna's Pen Speaks ... said...

மிக்க நன்றி..தங்களின் ஆலோசனைப்படி மீண்டும் சரிபார்க்கிறேன்.