Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Womb of Kousalya Devi being blessed with Lord's Avatara

கம்ப இராமாயண தமிழ்ச்சாரல்

திரு அவதாரப் படலம்

திருமாலின் அவதாரமான ராமபிரான் அவதாரம் செய்ததைக்  கூறும் பகுதியாகும்.  இதில் தயரத  மன்னன்  மகப்  பேறின்றி   இருத்தலை வசிட்ட  முனிவரிடம்  கூறுதலும்.  வசிட்டர் தேவர்களுக்குத்  திருமால் அருளியதைச்  சிந்தித்தலும்  புதல்வரை அளிக்கும்  வேள்வி செய்யத் தயரதனுக்கு  வசிட்டர் கூறுதலும். கலைக்கோட்டு  முனிவரால் வேள்வி நடைபெறுதலும், வேள்வித்தீயில் எழுந்த பூதம் பிண்டம் கொண்டுதருதலும், அப்பிண்டத்தைத்   தயரதன்  தேவியர் மூவருக்கும் பகிர்ந்தளித்தலும், அதன் காரணமாகத் தேவியர்  கருவுறுதலும்  ராமன் முதலிய  நால்வரும் அவதரித்தலும், புதல்வர்களுக்கு வசிட்டர்  பெயர் சூட்டுதலும்  பிள்ளைகளின்  வளர்ச்சியும்-கல்விப்  பயிற்சியும்-யாவரும் போற்ற ராமன் இனிதிருத்தலும் விவரிக்கப்படுகின்றன

கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல்

பாடல்

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே,

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

பொருள்

ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின் = மகப்பேற்றுக்குரிய பருவம் வந்து  சேர்ந்த அந்தக்காலத்தில்;

மா இரும மண்  மகள் மகிழ்வின் ஓங்கிட = மிகப்பெரிய  நிலமகள் மகிழ்ச்சியில் ஓங்கவும்;

வேய்புனர் பூசமும் = பொருந்திய ‘புனர்பூசம்’
என்னும் விண்மீனும்;

விண்ணுளோர்களும் = வானுலகில்  வாழும்
தேவர்களும்;

தூயகற்கடகமும் = தூய்மையானதாகிய கடக ராசியும்;

எழுந்து துள்ளவே = (மகிழ்ச்சியினால்) எழுந்து துள்ளி ஆடவும்;

சித்தர், இயக்கர் = தேவர்களுக்குள் ஒருவகையினர்;

தெரிவை = பெண்ணைக் குறிக்கிறது;

வித்தக முனிவரும் = அறிவில் சிறந்து  விளங்கும் முனிவர்களும்;

விண்ணுளோர்களும் = விண்ணுலகத்தில் உள்ளவர்களும்;

நித்தமும் முறைமுறை நெருங்கி ஆர்ப்புற = நித்திய சூரிகளும் முறைப்படி கூடி ஆரவாரம் செய்யவும்

தத்துறல் ஒழிந்து = வளர்ச்சிகுன்றல் இல்லாமல்;

நீள் தருமம் ஓங்கவே = நெடிய தருமதேவதை இடையீடின்றிப் பெருகி வளரவும்     

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே,

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.

தொடரும்...

அன்புடன்

நா. பிரசன்னலக்ஷ்மி

No comments: