Monday, August 10, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | கோசலையின் மனநிலை | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Kosala's mixed thoughts

கம்ப ராமாயண தமிழ்ச்சாரல்

 

அயோத்யா காண்டம் - மந்திரை சூழ்ச்சிப் படலம்

 

இராமனுக்கு முடிசூட்டு விழா என்பதை அறிந்த கோசலையின் மனநிலை

 

தசரதன் இராமனின் முடிசூட்டு நாள் குறிக்கக் கோள்கள் அறிந்த சோதிடரை கூட்டி சென்றான்.

 

இச்செய்தி சூறைக்காற்று போல நகர் முழுவதும் பரவியது. இராமன்பால் அன்பு கொண்ட நங்கையர் நால்வர் கோசலையிடம் சென்றனர். அவர்களது மட்டற்ற மகிழ்ச்சியை கண்டு ஆனந்தமடைந்த கோசலை காரணம் வினாவினாள்.

 

அவர்கள், “மன்னன், உன் மகனுக்கு மணிமுடி சூட்டுகிறான்என்று மனம் மகிழ்ந்து உரைத்தனர்.

 

அந்த நங்கையர் கூறிய நற்செய்தி, கோசலைக்கு தென்றலின் சுகத்தை தேடித் தந்தன, அதே சமயத்தில் வாடையின் சூடும் அவளைச் சுட்டது.

 

 

பாடல்

 

'சிறக்கும், செல்வம் மகற்கு' என, சிந்தையில்

பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற,

வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால்

துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே.

 

 

பொருள்

 

சிறக்கும் = சிறப்பினை தரும்;

 

செல்வம் = நாடு என்று கொள்ளலாம்;

 

மகற்கு = மகன் இராமனுக்கு;

 

என = என்று;

 

சிந்தையில் = சிந்தனையில், மனதில், கற்பனையில்;

 

பிறக்கும் பேர் உவகைக் கடல் = தோன்றிய பெரிய மகிழ்ச்சிக் கடல்;

 

பெட்பு அற = பெருமை இன்றி போக;

 

வறக்கும் = வரள வைக்கும் (காய்ந்து போக வைக்கும்);

 

மா = பெரிய;

 

வடவைக் கனல் = கடலை வற்ற வைக்கும் தீ;

 

ஆனதால் = ஆனதால்

 

துறக்கும் = துறக்கும், இழக்கும்;

 

மன்னவன் = தசரதன்;

 

என்னும் துணுக்கமே = என்ற அச்சமானது.

 

நயம்

 

வடவைக் கனல் அவளைத் தீண்டியது, தசரதன் ஆட்சியை விட்டு நீங்குகிறான் என்பதால்.

 

கடல் நடுவே வடவாக்கினி (வடல் + அக்கினி) ஒன்று உள்ளதாக நமது புராணங்களில் நம்பப்படுகிறது.  கடல் நீரின் அளவு அதிகமாகும் போது, வடவை கனல் அதிகப்படியான நீரை வற்றச் செய்துவிடும் (ஊழி காலத்தில் வடவை கனல் மிகப் பெரிதாக உருவெடுத்து அத்தனை கடலையும் வற்ற வைத்துவிடும் என்பது நம்பிக்கை)

 

இராமனுக்கு முடி சூட்டுவது என்றால் அந்த முடி தசரதன் தலையில் இருந்து இறங்க வேண்டும். தசரதன் முடி துறந்தால் தான் இராமன் முடி சூட முடியும்.

 

இராமனுக்கு முடி என்று கேட்ட கோசலை இன்பம், மகிழ்ச்சி கடல் மாதிரி இருந்ததாம்

 

உடனே நினைத்துப் பார்க்கிறாள் ... இராமன் முடி சூட வேண்டுமானால் தசரதன் முடி துறக்க வேண்டுமே, என்று நினைக்கிறாள்.

 

அப்படி நினைத்தவுடன் அவளின் சந்தோஷக் கடல் வடவைக் கனல் எழுந்து கடலை வற்ற வைப்பது மாதிரி வற்றிப் போய் விட்டது

 

இராமன் முடி சூட்டுவதில் கோசலைக்கு இன்பம் தான் என்றாலும், அதில் அவள் பட்ட சின்ன துன்பத்தை , இவ்வளவு நுணுக்கமாக கையாளுவது கம்பனுக்கே சாத்தியம். பின் வரப்போகும் பல மாற்றங்களை குறிப்பால் உணர்த்துகிறாரோ?

 

'சிறக்கும், செல்வம் மகற்கு' என, சிந்தையில்

பிறக்கும் பேர் உவகைக் கடல் பெட்பு அற,

வறக்கும் மா வடவைக் கனல் ஆனதால்

துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே.

 

தொடரும்...

 

அன்புடன்

நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தயரதன் இராமனைத் தழுவுதல் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Dasaratha hugging Rama

 

கம்பராமயண தமிழ்ச்சாரல்

 

அயோத்யா காண்டம் - மந்திரப்படலம்

 

தயரதன் இராமனைத் தழுவுதல்

 

தசரதன், இராமனுக்கு அரசாட்சி என்ற பொறுப்பை,  அரச பதவியை தருவதற்கு முடிவு செய்து விட்டான்.  இராமனை அழைத்து வரச் சொன்னான். இராமனும் வந்தான்.

 

பாடல்

 

நலம் கொள் மைந்தனைத் தழுவினன்' என்பது என்? நளிநீர்

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்,

விலங்கல் அன்ன திண் தோளையும், மெய்த் திரு இருக்கும்

அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான்

 

பொருள்

 

நலம் கொள் = நன்மைகள் நிறைந்த

 

மைந்தனைத் = மகனை (இராமனை)

 

தழுவினன்' என்பது என்? = தழுவினான், எதற்காக

 

நளிநீர் = கடல் சூழ்ந்த

 

நிலங்கள் = இந்த உலகத்தை

 

தாங்குறு நிலையினை = தாங்கக் கூடிய நிலையை

 

நிலையிட நினைந்தான் = அளவிட நினைத்தான்

 

விலங்கல் அன்ன திண் தோளையும் = மலை போன்ற தன்னுடைய தோளையும்

 

மெய்த் திரு இருக்கும் = உண்மையான திரு இருக்கும். அதாவது திருமகள் நிஜமாக இருக்கும்

 

அலங்கல் மார்பையும் = மாலை அணிந்த மார்பையும்

 

தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான். = தனது தோளையும் மார்பையும் கொண்டு அளந்தான்.


ம்

 

இத்தனை வருடம் தசரதன் அரசை ஆண்டான்.  அந்த ஆட்சிப் பொறுப்பு அவன் தோளில் இருந்தது.   இப்போது அனுவம் எதுவும் இல்லாத இராமனிடம் அரசைக் கொடுக்கப் போகிறான். இராமனால் இந்த பொறுப்பை ஏற்று நடத்த முடியுமா ? அவன் தோள்களுக்கு அந்த வலிமை இருக்கிறதா என்று அறிய, அவனை அணைக்கும் போது  இராமனின்  தோளை தன் தோள்களால் அளந்து பார்த்தானாம்.


நலம் கொள் மைந்தனைத் தழுவினன்என்பது என்நளிநீர்

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்,

விலங்கல் அன்ன திண் தோளையும்மெய்த் திரு இருக்கும்

அலங்கல் மார்பையும், தனது தோள், மார்பு, கொண்டு அளந்தான்

 

தொடரும் ....

 

அன்புடன்

நா.பிரசன்ன லக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | தசரதனின் ஒற்றை நரைமுடி | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Dasaratha's Grey hair

 

கம்பராமயண தமிழ்ச் சாரல்

 

அயோத்யா காண்டம் - மந்திரப்படலம்

 

ஒரு நாள் தசரதன் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான். காதோரம் ஒரே ஒரு நரைமுடி. அந்த நரை முடி அவனிடம் ஏதோ சொல்லுவது போல் இருந்தது. உன்னிப்பாக கேட்டான்.

 

'மன்னனே, நீ இந்த அரசாட்சியை உன் மகனிடம் தந்து விட்டு, கானகம் சென்று தவம் செய்யச் செல் ' என்று சொல்லியது.

 

தசரதனிடம் அந்த நரை முடி சொன்ன பாடல் ...

 

பாடல்

 

மன்னனே! அவனியை

மகனுக்கு ஈந்து, நீ

பன்ன அருந்தவம்

புரி பருவம் ஈதுஎன,

கன்ன மூலத்தினில்

கழற வந்தென,

மின் எனக் கருமை போய்

வெளுத்தது - ஓர் மயிர்.

 

பொருள்

 

மன்னனே! = மன்னவனே

 

அவனியை = இந்த உலகத்தை, இந்த அரசை

 

மகனுக்கு ஈந்து, = உன் மகனிடம் தந்து விட்டு

 

நீ = நீ

 

பன்ன அருந்தவம் = செய்வதற்கு அறிய தவம்

 

புரி = புரிய, செய்ய

 

பருவம் ஈது = சரியான காலம் இது

 

என = என

 

கன்ன மூலத்தினில் = கன்னத்தின் ஓரத்தில்

 

கழற = அதட்டி சொல்ல, கண்டித்து சொல்ல

 

வந்தென = வந்தது போல வந்தது

 

மின் எனக் = மின்னலைப் போல, வெண்மையாக, ஒரு ஒளிக் கற்றை போல

 

கருமை போய் = கருமை நிறம் போய்

 

வெளுத்தது  = வெண்மையாக வந்தது

 

ஓர் மயிர் = ஒரே ஒரு முடி

 

 

தசரதனின் காதோரம் தோன்றிய இந்த ஒற்றை நரைமுடி பின்பு இராவணனின் பத்து தலை அகந்தையை வீழச்செய்தது

 

தொடரும்...

 

அன்புடன்

நா. பிரசன்னலஷ்மி

Tuesday, July 7, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | பரசுராமன் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Parasurama challenging Rama

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

பரசுராமப் படலம்

இராமன் சீதை மணம் முடிந்து இருவரும் ரதத்தில் அயோத்தி நோக்கி செல்கையில், பரசுராமன் இடைமறித்தார்.

பரசுராமன் கோபமாக ”நான் உன் குல க்ஷத்திரிய அரசர்களைக் கொன்று வென்ற உலகம் முழுவதையும் முனிவர்களுக்குக் கொடுத்துவிட்டு, வேறு பகைவர்கள் இல்லையென்று எண்ணி, துறவு பூண்டு ஒரு மலையில் தங்கி தவம் செய்துகொண்டிருந்தேன். நீ வில்லை முறித்த ஓசை என் செவியில் விழுந்தது. அந்த ஆரவாரம் என் தவத்தைக் கலைத்துவிட்டது. 'இன்னும் வீரனான ஒரு ஷத்ரியன் எங்கோ உயிரோடு இருக்கிறான்’ என்று கோபங் கொண்டு இங்கே வந்தேன். நீ ஆற்றல் உள்ளவன் என்றால் உன்னோடு போர் செய்வேன். அதற்கு முன்னால், உன்னால் முடிந்தால் முதலில் இந்த வில்லை வளைத்துப் பார்” என்கிறான்.

பரசுராமன் இராமனை நோக்கி, “இராமா, நீ ஒடித்த வில் ஊனமுற்ற வில். அதை நீ முறித்ததெல்லாம் பெரிய வீரத்தில் சேர்த்தியில்லை. விஷ்ணுதனுசு இதோ இருக்கிறது. இதை உன்னால் வளைக்க முடியுமா?” என்று சவால் விடுகிறான்.

ஒருவர் வெற்றியையும், வெற்றிச் செயலையும் எப்படி ஆணவத்தில் சிலர் இழித்தும் பழித்தும் கூறுவாரோ அப்படியே பேசுகிறான் பரசுராமனும்.

புன்சிரித்த ராமன், பரசுராமனிடம் வில்லைக் கேட்கிறான்.

செருக்கோடும் தவ வேகத்தோடும் கோபவெறியோடும் தோன்றிய பரசுராமன், தன் கையிலிருந்த விஷ்ணு தனுசை இராமன் கையில் கொடுக்கிறான்.

அப்போது இராமன் கோபம் கொள்ளாமல் அதே சிரிப்பு மாறாமல் அவ்வில்லை பெற்று, சுலபமாக நாணேற்றினான்.

வில் வளைத்த இராமன், பரசுராமனைப் பார்த்து, "உலகின் அரசர்களை எல்லாம் கொன்றாய். என்றாலும் வேத விதை முனிவன் மகன் நீ ஆதலால் உன்னைக் கொல்லக் கூடாது. ஆனால் வளைத்த வில்லுக்கு இலக்கு வேண்டுமே, அது யாது? என்று இராமன் கேட்டான்.


பாடல்

எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!' என,
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே

பொருள்

எய்த அம்பு = நீ இப்போது தொடுக்கும் அம்பு;

இடை பழுது எய்திடாமல் = இடையே குறை நேரா வண்ணம்;

என் செய் தவம் யாவையும் = நான் செய்த தவத்தின் பயன் முழுவதையும்;

சிதைக்க என = கொள்வதாக என்று சொல்ல;

கை அவண் நெகிழ்தலும் = (அப்போது) இராமபிரானின் கை நெகிழ்ந்த;

கணையும் சென்று = அம்பும் உடனே சென்று;

அவன் மை அறு தவம் = பரசுராமர் ஈட்டியிருந்த தவத்தின் பயன்கள்;

எலாம் வாரி, மீண்டதே = யாவற்றையும் வாரிக் கவர்ந்து கொண்டு அம்பறாத் தூணியை மீண்டும் வந்தடைந்தது.

நயம்

இராமன் நாணேற்றியே கணமே, பரசுராமன் கர்வம் அழிந்து விட்டது. ஆணவம் அகன்று விட்டது.

"இந்த வில்லில் தொடுத்த அம்பு வீண் போவதன்று. எனவே இதற்கு இலக்கு யாது? விரைவாகச் சொல்” என்ற இராமனின் அந்தக் கேள்விக்கு "தன் தவமே இலக்கு" என்று கூறுகிறான் கர்வம் அழிந்த பரசுராமன்.

நான் செய்த தவத்தின் பயனை உன் அம்புக்கு இலக்காகத் தருகிறேன் என்று பரசுராமன் கூற, இராமன் அம்பு பரசுராமன் தவத்தையெல்லாம் வாரிக்கொண்டு இராமனிடம் திரும்பியது.

இராமனை வெல்ல வந்தவனின் மனதை, அன்பால் இராமன் வென்று விட்டான். இராமனின் அன்பு நெறி பகைவன் மனத்தையும் மாற்றிப் புனிதனாக்கியது.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?" என்பது வள்ளுவர் வாக்கு.

"நீ நினைப்பவை எல்லாம் நிறைவேறட்டும்" என்று இராமனை வாழ்த்தித் தொழுது போகிறான் பரசுராமன்.

இராமனின் ஆணவமற்ற தன்மை, பொறுமை, அன்பு, மரியாதை, தைரியம், வீரம், வேகம், விவேகம் போன்ற பல குணாதிசயங்களை ஒரு பாடலில் அடக்கியாள்வது கவி சக்கரவர்த்தி கம்பருக்கு மட்டுமே சாத்தியம்.

எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!' என,
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

Monday, July 6, 2020

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | இராமன் சீதை மணம் | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Sita Rama Kalyanam

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

கடிமணப்படலம்

ஸ்ரீ இராமன் சீதையின் கையைப் பற்றி தீ வலம் வரும் பாடல்

பாடல்

வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான்

பொருள்

வெய்ய  கனல்  தலை = வெம்மை  மிக்க  தீயின்கண்;
வீரனும்  அந்நாள் = மாவீரனாகிய  இராமபிரான்  அப்பொழுது;
மையறு  மந்திரம்  மும்மை வழங்கா = குற்றமற்ற மந்திரங்களை மும் முறை கூறி; 
நெய் அமை ஆவுதி  யாவையும்  நேர்ந்தே = நெய்யோடு கூடிய
அவியுணவு யாவற்றையும் பெய்தான் (அதன்பின்);
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான் = அழகிய சீதையினுடைய தளிர் போன்ற மெல்லிய கரத்தினைத் தனது அகன்ற திருக்கரத்தாற் பற்றினான்.

நயம்

மும்மை வழங்குதல் என்பது மந்திரத்தை உச்சரித்து நெய்யை மும்முறை மண்ணுதல் என்பர்.

“நெய்யை முனை  முதிர் தருப்பை தன்னால்  மந்திரத்து அமைய முக்கால் மண்ணி” என்று சீவகசிந்தாமணி (2465)  நூலில் உள்ள பாடல் இந்த மரபை பேசுகிறது.

அறம் தளிர்ப்பதற்கு ஆவனவெல்லாம் புரிய உள்ள கை என்றும் பொருள்பட
தோன்ற, “தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்” என்றார் கம்பர்.


வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான்


 தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | இராமனின் அழகு | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Rama's Divine Beauty

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

உலாவியற் படலம்

இராமன் மிதிலை நகரிலே உலா வந்த போது , வீதி வீதியாய் வீடுகளில் உள்ள பெண்களெல்லாம் தலைவாயிலுக்கு ஓடி வந்து இராமனை காணுகிறார்கள். இரானது திவ்விய அழகு எப்படி வசீகரக்கிறது என்று கம்பர் கூறுகிறார்.

பாடல்

தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்

பொருள்

தோள்கண்டார் = இராமனின் தோள்களை கண்டவர்கள்

தோளே கண்டார் = அந்த தோளை மட்டும் தாம் பார்க்க முடியும். அதை விட்டு அவர்கள் கண்களை எடுக்க முடியாது, அவ்வளவு அழகு

தொடுகழல் = கழல் என்ற ஆபரணம் அணிந்த 

கமலம் அன்ன = (கழல் எப்போதும் தொட்டு கொண்டிருக்கும்) தாமரை போன்ற

தாள்கண்டார் = அடிகளை கண்டவர்கள்

தாளே கண்டார் = அந்த திருவடிகளை மட்டுமே கண்டார்

தடக்கை கண்டாரும் = கையை கண்டவரும்

அஃதே = அதே போல் கையை மட்டும் கண்டனர்

வாள்கொண்ட = வாள் போன்ற கூரிய

கண்ணார் = கண்களை உடைய பெண்கள்

யாரே வடிவினை முடியக் கண்டார் = யாருமே அவன் முழு அழகையும் காணவில்லை

ஊழ்கொண்ட = எப்போது தோன்றியது என்று அறியா காலம் தொட்டு உள்ள

சமயத்து அன்னான் = மதங்களில் உள்ள கடவுளின்

உருவுகண் டாரை ஒத்தார் = உருவத்தை கண்டவர்களை போல அந்த பெண்கள் இருந்தார்கள்.

நயம்

இராமனின் மேனி அழகு பற்றிய பாடலாக அமைத்து , அதன் மூலம் இறையாண்மை இயல்பை கம்பர் நயம்பட கூறுகிறார்.

எப்படி கடவுளை முழுமையாக கண்டு கொள்ள முடியாதோ அது போல இராமனின் அழகையும் முழுமையாக கண்டு உணர முடியாதாம்.

செளந்தர்ய ஈடுபாட்டை வைத்துக் கொண்டு, சமயவாதிகள் ஒவ்வொருவரும் இறைவனது திருஉருவில், ஒவ்வொரு அம்சத்தையே காண்கிறார்கள் என்ற அற்புத உண்மையையும் கவிச்சக்கரவர்த்தி எளிதாகவும் சுவையாகவும் விளக்குகிறார்.

தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி

கம்ப இராமயண தமிழ்ச்சாரல் | சிவதனுசு | Drizzles from Kamba Ramayanam Tamil Epic - Rama handling Siva Danus

கம்ப இராமயண தமிழ்ச்சாரல்

கார்முகப் படலம்

ஜானகி தேவி சீதையை மணம் புரிய ஏற்றவன் சிவதனுசு என்னும் பலம் வாய்ந்த வில்லை வளைக்க வல்லவனாக இருக்க  வேண்டும்.

ஆனால், அந்த விவாக நிபந்தனையான வில்லை யாராலும் அசைக்க கூட முடியவில்லை. பல மன்னர்கள் தோற்றனர். சீதையின் திருமணம் பற்றி எல்லோரும் கவலை கொண்டிருக்க, ஜனகனின் தலைமை புரோகிதரான சதானந்த முனிவர்,  "சக்கரவர்த்தி திருமகன்" இவ்வில்லை வளைத்தால் உலகம் மகிழும்" என்று கூற,  விஸ்வாமித்திரர் இராமரைப் பார்த்தார். முகக்குறிப்பை புரிந்து இராமர் , வேள்வியில் ஆகுதியான நெய் எப்படி செழிப்புடன் தீயாக எழுமோ, அப்படி எழுந்தார்.

நல்லோர் புன்னகை பூக்க, விண்ணோர் உவக்க, விண்ணும் மலையும் நாண, இராமன் வில்லை நோக்கி நடந்தான்.

பாடல்

ஆடக மால் வரை அன்னது தன்னை,
'தேட அரு மா மணி, சீதை எனும் பொன்
சூடக வால் வளை, சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது' என்ன, எடுத்தான்.

பொருள்

சீதைக்குச் சூட்ட மாலையை எடுப்பது போல இராமன் வில்லை எடுத்தான்.

ஆடக மால் வரை அன்னதுதன்னை = மிகப்பெரிய பொன் மலையை போன்ற அந்த சிவ வில்லை
தேட அரு மா மணி = சீதை எனும் பொன்
சூடக வால் வளை சூட்டிட = கிடைத்தற்கரிய சிறந்த இரத்திரனமாம் சீதை எனுப்படுபவளுமான பொன்னாலாகிய கை வளையல்களையணிந்த பெண்ணிற்குச் சூட்டும் பொருட்டு
நீட்டும் ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் = மலர்ந்த பூமாலையே என்று எண்ணுமாறு எளிதாகத் தூக்கி எடுத்தான்

சீதைக்குத் தான் அணியப்போகும் மண மாலையை எவ்வளவு எளிதாகவும் அலஷ்யமாகவும் எடுப்பானோ அப்படியே அதை எடுத்தான்.

நயம்

இராமன் மலர்ந்திருக்கும் பூக்கள் கொண்ட மாலையை எடுப்பது போன்று சிவ தனுசை எடுக்கும் போது கூடியிருந்த மக்கள், கண் இமைக்காமல் உற்று கவனித்துக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு வேறு ஒன்றுமே தெரியவில்லை.

பின் வரும் பாடலில் கம்பர், இராமனின் வலிமையையும்,  வேகத்தையும் அருமையாக விளக்குகிறார்.

எல்லாரும் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். இராமன் மண்டியிட்டதையும், வில்லின் நாணைப் பிடித்ததையும் பார்ப்பதற்கு முன்னர், அவன் கையில் எடுப்பதைப் பார்த்தனர். வில் ஒடிந்த ஓசையைக் கேட்டனர். அத்தனை விரைவு.

இராமன் கையில் எடுத்தது தெரியும், அவ்வளவுதான். பின் வில் முறிந்த பேரொலியைத்தான் அடுத்துக் கேட்டார்கள். அந்தச் செயலின் மின்னல் வேகத்தை கம்பர் வேறு எதனுடனும் ஒப்பிட்டுச் சொல்லவில்லை, ஒப்பிட்டால் அசட்டுத்தனமாகப் போய்விடும் என்று நினைத்திருப்பாரோ  என்னவோ ..

நான்கே நான்கு வார்த்தைகள்தான்.

"எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்". அவ்வளவு தான்!

ஆடக மால் வரை அன்னது தன்னை,
'தேட அரு மா மணி, சீதை எனும் பொன்
சூடக வால் வளை, சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது' என்ன, எடுத்தான்.


தொடரும்...

அன்புடன்
நா. பிரசன்னலக்ஷ்மி